ஜூலை 23,2011. இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியை நிறுத்தி வைக்கவேண்டும் என்று
கோரும் ஒரு தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டி ஒன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2009ம் ஆண்டின் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள்
குறித்த ஒரு பொறுப்பை ஏற்கும் நடவடிக்கையை இலங்கை எடுக்காதவரை நிதி உதவி நிறுத்தப்பட
வேண்டும் என அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின்
வெளியுறவு விவகாரக் கமிட்டியினால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு மனித
நேய உதவி, நிலக்கண்ணி வெடிகளை அகற்ற உதவி, ஜனநாயகம் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்த
எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவி ஆகியவை தவிர, வேறுபிற உதவிகள் அனைத்தையும் நிறுத்துகின்ற
ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின்
சர்வதேச மேம்பாட்டுத் துறையானது 2010ம் ஆண்டில் மட்டுமே இலங்கைக்கென ஒரு கோடியே முப்பது
இலட்சம் டாலர் உதவிகளைக் கேட்டிருந்தது.