சவுதியின் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டம் அமைதியான போராட்டங்களுக்குத் தடையாக
இருக்கும் -ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
ஜூலை 22,2011. சவுதி அரேபியாவில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான
புதிய இரகசியச் சட்டம் அமைதியான போராட்டங்கள் இடம் பெறுவதற்குத் தடையாக இருக்கும் என்று
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற அனைத்துலக மனித உரிமைகள் கழகம் கூறியது. இச்சட்டத்தில்
குறிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகள் மனித உரிமைகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும்
என்று அக்கழகம் தனது அச்சத்தை வெளியிட்டுள்ளது. விசாரணையின்றி நீண்டகாலக் காவல், சட்டத்தின்படி
உதவிகளைப் பெறும் வழிகளுக்குக் கட்டுப்பாடு, மரண தண்டனைகளை அதிகரித்தல் உட்பட பல நடவடிக்கைகள்
அதில் உள்ளன எனக் கூறப்படுகின்றது.