தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டம்
ஜூலை19,2011. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் “தாழ்த்தப்பட்டவர்
பட்டியலில்” சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பெருமெண்ணிக்கையில் உண்ணாவிரதப்
போராட்டம் இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை,
இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவை, தேசிய தலித் கிறிஸ்தவர்கள் அவை, ஆகியவை இணைந்து இம்மாதம்
25 முதல் 27 வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும், 28ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிய நடைபயணத்தையும்
நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில், பொருளாதார, கல்வி மற்றும் சமூகநல வாய்ப்புக்களுக்கு
இந்து தலித்துக்களுக்கு மட்டும் வழிஅமைக்கும் இந்திய அரசியல் அமைப்பு எண் 3, 1950ல் அங்கீகரிக்கப்பட்டது.
பின்னர் 1956ல் புத்த மதத்தினருக்கும் 1990ல் சீக்கியர்களுக்கும் இவ்வுரிமை கொடுக்கப்பட்டது.
அதேமாதிரியான உரிமைகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர்களும்
முஸ்லீம்களும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தற்போதைய நடுவண் அரசும்
பிஜேபி அரசு போன்றே உள்ளது, எந்த மாற்றமும் இல்லை என்று தலித் உரிமைகள் ஆர்வலர் வின்சென்ட்
மனோகரன் கூறினார்.