2011-07-18 17:00:33

வாரம் ஓர் அலசல் – ஆழ்கடல் அதிசயங்களை வருங்காலத் தலைமுறைகளும் வியக்க வேண்டாமா


ஜூலை 18,2011. இந்த ஜூலை 10ம் தேதி திருச்சபை கடல் ஞாயிறைச் சிறப்பித்தது. அதையொட்டி கடல் தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நேர்காணல் நிகழ்ச்சியில் வழங்கினோம். நமது நேயர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த ஞாயிறையொட்டி நாமும் கடலுக்குள், அதுவும் ஆழ்கடலுக்குள் செல்லத் துணிந்தோம். ஆழ்கடல் என்பதால் அங்கு செல்வதற்கு ஒருவாரம் ஆகிவிட்டது. ஆழ்கடலில் எத்தனையோ அதிசயங்களையும் வகைவகையான கடல்வாழ் உயிரினங்களையும் கண்டோம். அவை அனைத்தையும் குறைந்த நேரத்தில் வழங்குவது இயலாது என்பதால், ஒருசிலவற்றை மட்டும், அன்பு நெஞ்சங்களே, இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
இராட்சத ஸ்குவிய்ட் (giant squid) என்ற ஒருவித சிப்பிமீன் பற்றி செய்தி ஒன்று 1997ம் ஆண்டில் வெளிவந்தது. இந்த இராட்சத ஸ்குவிய்ட், இந்தப் பூமியில் வாழும் உயிரினங்களில் புரியாதப் புதிர்களை உள்ளடக்கிய உயிரினம் என்று அறிவியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தனர். உலகின் பெரும்பாலான பெருங்கடல்களின் ஆழத்தில் வாழும் இந்த ஸ்குவிய்ட், கடலில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாகும். இராட்சதப் பெண்ணினம் 13 மீட்டரும் ஆணினம் பத்து மீட்டரும் உள்ளன. இருபது மீட்டர் அளவிலான ஸ்குவிய்ட் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த இராட்சதப் பெண் ஸ்குவிய்ட்டைப் பிடித்து ஆராய்ந்த அறிஞர்கள் அதன் முன்புறத் தசைகளுக்குள் ஆணுடைய விந்தணு, மாத்திரை வடிவிலும், அந்த மாத்திரையினுள்ளே இலட்சக்கணக்கான உயிரணுக்கள் இருப்பதையும் கண்டார்கள். இதையுமே பெரிய அதிசயமாகவே அறிவியலாளர் கண்டார்கள். அதேசமயம் இந்தப் பெண் ஸ்குவிய்ட் இவற்றை வைத்து எப்படி இனப்பெருக்கம் செய்கின்றது என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை, காரணம் இவை வாழும் ஆழ்கடலின் இருளுக்குள் மனிதன் செல்ல இயலவில்லை என்று செய்திகளில் வாசித்தோம்.
வில் மீன். இந்த அதிசய கடல்வாழ் உயிரினம், தனது இரையை வேட்டையாட ஒரு விசித்திரமான யுக்தியைக் கையாளுகிறது. இதனைத் “தண்ணீர் அம்புடன்” வேட்டையாடும் வில்மீன் என்கிறார்கள். இந்த மீன் தனது இரைகளை வீழ்த்துவதற்கு தன்னுடைய வாயைப் பயன்படுத்தி, தன்னைச் சுற்றியுள்ள தண்ணீரை உள்ளிழுத்து, பின் அந்தத் தண்ணீரையே ஓர் அம்பு போல ஏறக்குறைய 3 மீட்டர் தூரத்திற்குப் பாய்ச்சி அவற்றை வீழ்த்திச் சாப்பிடுகின்றது. ஓர் அதிசயம் என்னவெனில், இந்த வில்மீன், தனது வாயில் தண்ணீரை வைத்துக் கொண்டு தூரத்தில் இருக்கின்ற தன்னுடைய இரையைப் பார்த்து குத்து மதிப்பாகத் தண்ணீரைத் துப்புகின்றது. உடனே துள்ளுப்பூச்சி, சிலந்தி, பட்டாம்பூச்சி போன்றவை கீழே விழுந்து விடுகின்றன. இந்த வில் மீன், 3 மீட்டர் தூரத்தில் ஒரு மரக்கிளையில் உட்கார்ந்திருக்கின்ற ஒரு பூச்சியுடைய உடல் நீளத்தையும், அது கிளையைப் பிடித்திருக்கிற உறுதியையும், கிட்டத்தட்ட கச்சிதமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ற மாதிரி தன்னுடைய தண்ணீர் அம்பைச் சரியாகச் செலுத்துமாம். இப்படிப் பலஅதிசயங்கள் ஆழ்கடலுக்குள் மறைந்து கிடக்கின்றன.
பொதுவாக, தண்ணீரில் உற்சாகமாக நீந்தும் மீன்களைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் சோக மீன் என்று கடலில் இருக்கின்றது. ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா அருகில் ஆழமான கடலில் இது வாழ்கிறது. கொஞ்சமே தசைகள், எலும்புகள் கொண்டது. பிதுக்கிய வாழைப்பழம் போல கொழகொழ என்று இருக்கும். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சோகமான மூஞ்சியுடன் இருக்கும். கடல்நீரின் அடர்த்தியை விட இந்தச் சோக மீனின் உடம்பின் அடர்த்தி குறைவே. இந்தச் சோக மீனை ஆங்கிலத்தில் Sad fish அல்லது Blob fish என்று சொல்கிறார்கள். இந்த மீன் இனமும் வேகமாக அருகி வருகிறதாம்.
தமிழகத்தில் இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் கடற்பசு, கடற்குதிரைகள், கடல்ஆமைகள், பவளப்பாறைகள், கடல் அட்டைகள் உட்பட மூவாயிரத்து அறுநூறுக்கு மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. வனத்துறையினர், இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட தேசிய கடல்வாழ் உயிரினப் பகுதியாக அறிவித்து கண்காணித்து வருகின்றனர். அரியவகை கடல்வாழ் உயிரினங்களைப் பிடிப்போருக்கு அபராதமும் ஏழாண்டுச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகின்றது. கடற்பசு என்று சொன்னால் அது பசுவைப் போன்று சில அம்சங்களைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த அரியவகை கடல்வாழ் உயிரினங்களில் கடற்குதிரைகள் சற்று வித்தியாசமானவை. அதன் முக அமைப்பு மட்டுமே குதிரையின் அமைப்புப் போன்று இருக்கும். இதற்கு இன்னும் ஓர் அதிசயம் இருக்கின்றது. வழக்கமாக மனிதராகட்டும், உயிரினங்களாகட்டும், கர்ப்பம் தரித்து குழந்தைகளைப் பெற்றெடுப்பது பெண்ணினம்தான். ஆனால், இந்தக் கடற்குதிரைகளில் தம் சந்ததியைச் சுமந்து பெற்றெடுப்பது ஆணினம்தான்.
மிகச்சிறிய மீனினத்தைச் சேர்ந்த உயிரினமாகிய கடற்குதிரைகள் 2.5 செ.மீ. முதல் 35 செ.மீ.வரையிலான நீளம் கொண்டவை. இவை உலகின் எல்லாக் கடற்பகுதியிலும் 35க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை கடலின் ஆழம் குறைந்த பகுதிகளிலே கடலின் ஓரப்பகுதியில் கடல்பாசிகளுக்கிடையே வாழ்கின்றன. இதன் உடலின் மேற்பகுதி கடினமான ஓடு போன்று இருப்பதால் இதன் பாதுகாப்புக்கு பெரிதும் உதவுகின்றது. மேலும், சூழலுக்கேற்றாற் போல் நிறத்தை மாற்றுவதால் எதிரிகளிடமிருந்து எளிதில் தப்பித்துக் கொள்கின்றது. நிறம் மாற்றுவதில் பச்சோந்திப் பல்லிகளைவிட இவை கில்லாடிகள். இது குதிரையின் பெயரைக் கொண்டிருந்தாலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க மூன்று நாட்கள் எடுக்கும் என்று சொல்கிறார்கள். இந்தக் கடல்குதிரை மீனுக்கு ஆஸ்துமாவைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இந்த அரியவகை கடல்வாழ் உயிரினங்களில், பவள உயிரிகள் எனப்படும் பவளப்பாறைகள் செய்யும் சேவை மிகப்பெரிது. இந்தப் பவளப்பாறைகள், சுண்ணாம்புக் கற்களாலான உயிரினமாக இருந்தாலும் இவை மற்ற நுண்ணுயிரிகளை உண்டு உயிர் வாழ்கின்றன. பொதுவாக பவளப்பாறைகள் ஒருவகையான விலங்கு அல்லது தாவரம் என்றுகூடச் சொல்லலாம். இவற்றிலுள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் இறந்துவிட்டால் இந்தப் பவளப்பாறைகளும் இறந்துவிடும். இந்தப் பாலிப்ஸ் உயிரினம்தான், கடலிலுள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு இவற்றுக்குக் கடினத்தன்மையையும் பல வகையிலானத் தோற்றத்தையும் தருகின்றது. இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும்பிற சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன. இந்தப் பவளப்பாறைகள் இந்தியாவில் மட்டும் 200 வகைகள் உள்ளன. இவை கடினமானவை, மிருதுவானவை என்று இரண்டு வகைப்படும். இவை பல வடிவங்களிலும் காணப்படும். மனிதமூளை வடிவம், மான்கொம்பு வடிவம், மேஜை மற்றும் தட்டுவடிவம் ஆகியவை போன்ற வடிவங்களிலும் இருக்கின்றன. கடல்விசிறி உயிரினமும் மிருதுவானப் பவளப்பாறை வகையைச் சேர்ந்தவை. இவை பார்ப்பதற்கு செடிகள் அல்லது சிறு கொடிகள் போன்று காணப்படும்.
பவளப்பாறைகள் பல உயிரினங்களுக்குத் தஞ்சம் கொடுக்கின்றன. ஏறக்குறைய 250க்கும் மேற்பட்ட பலவிதமான கண்ணைக்கவரும் வண்ணமீன்கள், பாசி வகைகள் போன்றவையும் கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டு உயிரினங்கள், முள்தோல் விலங்குகள் போன்றவையும் பவளப்பாறைகளைச் சார்ந்து வாழ்கின்றன. எனவே இந்தப் பவளப்பாறைகள் பல கடல்வாழ் உயிரினங்களுக்கு உறைவிடமாகவும் உணவிடமாகவும் இருப்பதுடன் அறிவியல் ஆராய்ச்சிக்கும் உதவுகின்றன. கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்தும் பாதுகாக்கின்றன. வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச்சூழலையும் மேம்படுத்துகிறது. இராமேஸ்வரம் பகுதியில் பவளப்பாறைகள் அதிகம் இருந்ததால்தான் அப்பகுதி சுனாமியால் தாக்கப்படாதவாறு பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பூமியில் மூன்றில் இரண்டு பகுதி கடல். இந்தப் பூமிப்பந்துக்குக் கடலன்னை வாரி வாரி வழங்கும் செல்வப் புதையல் கணக்கற்றது. அவற்றில் ஒன்று கடல் பேனாக்கள். பார்ப்பதற்குப் பறவைகளின் இறகுகள் போல காணப்படும் கடல் பேனாக்கள், பவளப்பாறைகளை உருவாக்கும் கடல் தாமரைகள் மாதிரியான ஒருவகைப் பூச்சிகள்தான். கடல் பேனாக்கள் உலகெங்குமிருக்கின்ற கடல் பகுதியில் வாழ்ந்தாலும் மன்னார் வளைகுடாவில் ஆழ்கடல் பகுதியில், அலைகள் ஆர்ப்பரிக்காத இடங்களில் கூட்டம், கூட்டமாக பல வண்ணங்களில் வலம் வருகின்றன. இந்த உயிரினம் 6 அடி உயரம் வரை வளரக் கூடியது. இதில் உள்ள ஒவ்வொரு இறகுகளும் 8 உணர்விழைகளைக் கொண்டிருக்கிறதாம். நவீன விசைப்படகுகள் இழுவலைகளின் மூலம் மீன் பிடிப்பதால் பல அரிய வகை கடல் பேனாக்கள் வேரோடு பிடுங்கப்பட்டு சிறிதும் பயனில்லாமல் கரைகளில் தூக்கி வீசப்படுகின்றன.
அன்பர்களே, தீர்க்கப்படாத பல நோய்களுக்கு மருந்துகள், கடல்வாழ் உயிரினங்களின் உடலிலுள்ள பல பொருட்களில் புதைந்திருக்கலாம் என்று தற்போது அறிவியலாளர் கருதத் தொடங்கியுள்ளனர். கலிஃபோர்னியா கடற்கரையில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அறிவியலாளர் கூட்டாக மேற்கண்ட முயற்சியில் ஒரு குறிப்பிட்ட கடல்வாழ் உயிரினம் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது. பிரையோஸ்டேட்டின் -1 என்ற இந்த மருந்திற்குத் தேவையான கடல்வாழ் உயிரினம் கலிஃபோர்னியா கடற்கரையில் மட்டும்தான் உள்ளது. இந்த மருந்திற்கானத் தேவையும் அதிகமாக உள்ளதால் பெருங்கடல்களில் மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மருந்துக் கம்பெனிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த ஆராய்ச்சிகளினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு காலப்போக்கில் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
மனித சமூதாயத்திற்குப் பேருதவி செய்யும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனிதன் சாவுமணி கட்டிக் கொண்டிருக்கிறான். தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, கடலில் வெடிவைத்து மீன்பிடிப்பது, கடற்கரையில் மண் அள்ளுதல் போன்ற காரணங்களால் இவை அழிவை எதிர்நோக்குகின்றன. கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு இலட்சம் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. கடல்வாழ் தாவரங்களின் இனப்பெருக்கமும் பாதிக்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம் குடகனாறு அணைக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளை வேட்டையாடுவதற்கு மீன்களில் விஷம் கலக்கப்படுகின்றது என்ற செய்தியையும் கடந்த வாரத்தில் வாசித்தோம்.
பூமியின் வெளிச்சத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இன்னும் நம்மில் பலர் அறியாமை, சுயநலம் போன்ற ஆழ்கடல் இருட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதருக்கு உள்ளேயுள்ள விலங்கினப் பண்புகளால் அவன் அதிசயய உயிரினங்களின் அழிவுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறான். எனவே ஆழ்கடலின் அதிசயங்களை ஆணவமும் பொறாமையுமின்றி வருங்காலத் தலைமுறைக்கு விட்டு வைப்போம். சாதனை படைக்க முற்பட்டால் வேதனைகளைத் தாங்கும் மனபலமும் மனஉறுதியும் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை என்பதை உணருவோம்.







All the contents on this site are copyrighted ©.