பானமாவில் அரசியல்வாதிகளின் போக்கு குறித்து ஆயர் பேரவை வருத்தம்
ஜூலை15,2011. மத்திய அமெரிக்க நாடான பானமாவில் பொது மக்களுடைய தேவைகளும் அரசியல்வாதிகளின்
தேவைகளும் பிரித்துப் பார்க்கப்படுவதற்கு அந்நாட்டின் ஆயர் பேரவை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. பொது
மக்களுடைய நம்பிக்கையையும் மதிப்பையும் பெறுவதிலிருந்து வெகுதூரம் விலகியிருக்கும் சில
அரசியல்வாதிகளின் போக்குகள் குறித்து தாங்கள் கவலை கொண்டுள்ளதாகக் கூறினர் ஆயர்கள். அரசியல்,
மனிதாபிமானம் நிறைந்ததாக இருக்கக வேண்டியது இன்றியமையாதது மற்றும் அது அவசியமானது என்றுரைக்கும்
பானம நாட்டு ஆயர்கள், வாக்களர்களின் விருப்பத்தை மதிப்பதாயும் மனித மாண்புக்கும் பொது
நலனுக்கும் முன்னுரிமை கொடுப்பதாயும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்
என்றும் வலியுறுத்தியுள்ளனர். 1821ல் இஸ்பெயினிடமிருந்தும் 1903ல் கொலம்பியாவிடமிருந்தும்
விடுதலையடைந்த பானம நாட்டில் சுமார் 85 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.