ஜூலை15,2011. இந்தியாவில் இந்துக்களின் புனித நதியாகவும் நாட்டின் வாழ்வாதாரங்களுக்கு
முக்கிய நதியாகவும் விளங்கும் கங்கையைச் சுத்தம் செய்வதற்கு உலக வங்கி நூறு கோடி டாலரைக்
கடனாக வழங்க இசைவு தெரிவித்துள்ளது. “கங்கை சுத்தப் பணி” என்ற இந்தத் திட்டத்தின்கீழ்
2020க்குள் இந்நதியில் கலக்கும் சாக்கடைகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் நிறுத்தப்படுவதற்குத்
திட்டமிடப்பட்டுள்ளது. 2500 கிலோ மீட்டர் தூரத்திற்கு உத்தரபிரதேசம், பீஹார், மேற்கு
வங்காளம் ஆகிய பகுதிகளில் பாயும் கங்கை நதி, இந்தியாவின் சுமார் 120 கோடி மக்களில் 25
விழுக்காட்டினருக்கு குடிநீரை வழங்குகின்றது. கங்கை நதி, உலகில் மிகவும் மாசடைந்துள்ள
நதிகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நதியில் தினமும் 1,200 கோடி லிட்டர் தொழிற்சாலை
மற்றும் நகரக்கழிவுகள் கலக்கின்றன என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.