2011-07-13 16:01:56

வத்திக்கான் - ஐரோப்பிய நாடுகளில் நற்செய்தி அறிவிப்பு


ஜூலை13,2011. ஐரோப்பாவின் சில முக்கிய நகரங்களில் மீண்டும் நற்செய்தி அறிவிக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது புதிய நற்செய்திப்பணிக்கானத் திருப்பீட அவை.
இந்தப் புதிய திட்டம் குறித்து திருப்பீட சார்புத் தினத்தாளான லொசெர்வாத்தோரே ரொமானோவில் (L’Osservatore Romano) விளக்கியுள்ள இத்திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஐரோப்பிய நகரங்களின் ஆயர்களுடன் வத்திக்கானில் இத்திங்களன்று நடத்திய கூட்டத்தில் இத்திட்டம் குறித்து கலந்து பேசிய பேராயர் Fisichella, “மாநகரங்களின் திட்டம்” என்று இதற்குப் பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இப்புதிய முயற்சியானது, 2012ம் ஆண்டு தவக்காலத்தில் தொடங்கப்படும். இதையொட்டிய பல்வேறு செயல்பாடுகள் ஒவ்வொரு நகரங்களின் பேராலயங்களில் இடம் பெறும்.
Barcelona, Budapest, Brussels, Cologne, Dublin, Lisbon, Liverpool, Paris, Turin, Warsaw, Vienna ஆகிய மாநகரங்களின் ஆயர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.