வட கொரியாவில் பசியால் வாடும் மக்களுக்கு ஐரோப்பிய ஐக்கிய அவை உணவு உதவி
ஜூலை 04, 2011. வட கொரியாவில் பசியால் வாடும் மக்களுக்கு 1 கோடி யூரோ உணவு உதவிகளை வழங்குவதாக
இத்திங்களன்று அறிவித்தது ஐரோப்பிய ஐக்கிய அவை. போதிய உணவின்மையால் துன்புறும் ஏறத்தாழ
ஆறு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பேரின் உயிரைக் காப்பாற்ற இந்த உதவியை வட கொரியாவிற்கு வழங்குவதாகக்
கூறும் ஐரோப்பிய ஐக்கிய அவை, இதுவரை வடகொரிய அரசு தன் மக்களில் மூன்றில் இரு பகுதியினருக்கு
வழங்கி வந்த உணவு உதவிகள் 60 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டுள்ளது. இந்த
உணவு உதவி, WFP எனும் உலக உணவு திட்ட நிறுவனத்தின் மூலம் விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது
ஐரோப்பிய ஐக்கிய அவை.