2011-07-04 16:35:41

இந்தியத் தலத்திருச்சபையின் கல்வி,மருத்துவம் மற்றும் நலஆதரவுப்பணிகளில் கிறிஸ்துவின் அன்பும் கருணையும் வழிந்தோடுகிறது - கர்தினால்


ஜூலை 04, 2011. கல்வி, மருத்துவம் மற்றும் நலஆதரவுத் துறைகளில் இந்திய தலத்திருச்சபை கொண்டிருக்கும் மறைப்பணி ஈடுபாட்டில் கிறிஸ்துவின் அன்பும் கருணையும் வழிந்தோடுகின்றது என்றார் இந்தியாவின் பம்பாய் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ்.
இயேசுவின் திரு இதய விழாவையொட்டி செய்தி வழங்கிய கர்தினால், நமக்கான இயேசுவின் உயரிய அன்பு குறித்து நினைக்கும் நாம், நற்செய்தி மதிப்பீடுகளான நீதி, அமைதி மற்றும் உண்மைக்கு நம்மைத் திறக்கவேண்டும் என்பது குறித்து அதன் வழி நினைவூட்டப்படுகிறோம் என்றார்.
ஏறத்தாழ 25,000 கல்வி நிறுவனங்கள், 746 மருத்துவமனைகள், 2547 மருந்தகங்கள் மற்றும் பல்வேறு மருத்துவமையங்களை நடத்திவரும் இந்தியத் திருச்சபை, தன் அன்பு நடவடிக்கைகள் மூலம் உண்மையின் அழகைப் பரப்பி வருகிறது என மேலும் கூறினார் கர்தினால் கிராசியாஸ்.







All the contents on this site are copyrighted ©.