“நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்.” (யோவான் 11: 16) “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்
என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித்
தெரிந்து கொள்ள இயலும்?” (யோவான் 14: 5) “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப்
பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்.”
(யோவான் 20: 25) “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” (யோவான் 20: 28) யோவான்
நற்செய்தியில் காணப்படும் இந்த நான்கு வாக்கியங்களுக்குச் சொந்தக்காரர் திதிமு என்று
அழைக்கப்படும் புனித தோமா. உள்ளத்தில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசியவர் இந்தச் சீடர்
என்பதை இந்த நான்கு வாக்கியங்களும் தெளிவாக்குகின்றன. இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து
இவர் சந்தேகப்பட்டதை மட்டும் மையப்படுத்தி இவரைச் "சந்தேகத் தோமையார்" என்று அழைக்கிறோம்.
இது இவரைக் குறித்த மிகவும் குறுகியதொரு பார்வை. இவர்தான் முதன் முதலில் இயேசுவை 'கடவுள்'
என்று அழைத்தவர். இயேசுவோடு சென்று இறக்கவும் துணிந்தவர் இவர். பன்னிரு திருத்தூதர்களில்
இவர் மட்டுமே உரோமையப் பேரரசின் எல்லைகளைக் கடந்து சென்று நற்செய்தியை அறிவித்தவர். 52ம்
ஆண்டு இவர் இந்திய மண்ணை அடைந்து, அங்கு நற்செய்தியை விதைத்தார். இந்திய மண்ணில் தன்
குருதியைச் சிந்தி, கிறிஸ்துவின் சாட்சியாக உயிர் துறந்தார். இவரது திருநாள் ஜூலை 3ம்
தேதி கொண்டாடப்படுகிறது.