சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு, ஐ.நா. அறிக்கை
ஜூலை02,2011. சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து
வருவதாக UNWTO என்ற ஐ.நா.வின் உலக சுற்றுலா நிறுவனம் அறிவித்தது. மத்திய கிழக்கு மற்றும்
வடக்கு ஆப்ரிக்காவில் இந்நிலை மந்தமாகக் காணப்பட்டாலும் இவ்வாண்டின் இறுதியில் இப்பகுதிகளிலும்
சுற்றுலாக்கள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. 2010ம்
ஆண்டின் முதல் நான்கு மாதங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவ்வாண்டில் இதே காலத்தில்
சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளதாக UNWTO
கூறியது. இந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை சுமார் 26 கோடியே 80 இலட்சம் பயணிகள் பயணம்
செய்துள்ளனர், இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டில் சுமார் 25 கோடியே 60 இலட்சம் என்றும் அந்நிறுவனம்
அறிவித்தது. தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் சுற்றுலாக்கள்
அதிகரித்துள்ளன.