திருத்தந்தை : பாலியம், பேராயர்களுக்கு இருக்கும் பொறுப்புக்களை நினைவுபடுத்துகின்றது
ஜூன் 30,2011. பேராயர்கள் அணியும் பாலியம் என்ற கழுத்துப்பட்டை, விசுவாசம், அன்பு இறைமக்களை
வழிநடத்துதல் ஆகியவற்றின் ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் கூறினார். தூயவர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவான இப்புதன்கிழமையன்று பாலியம்
பெற்ற நாற்பது புதிய பேராயர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை இவ்வியாழனன்று
வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஆயர்கள் என்ற முறையில் இந்தப் பேராயர்களுக்கு
இருக்கும் பொறுப்புக்களையும் இந்தப் பாலியம் நினைவுபடுத்துகின்றது என்றார். இந்தியாவின்
ஆந்திர மாநிலம் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இந்தப் புதிய பேராயர்கள் ஒவ்வொருவரின் பெயரையும்
குறிப்பிட்டு பல ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வுரையை வழங்கினார் திருத்தந்தை. இந்தப்
புதிய பேராயர்கள் தங்களது மேய்ப்புப்பணியைத் திறம்பட ஆற்றுவதற்கு ஊக்கமளித்ததோடு அவர்களுக்காகச்
செபம் செய்வதாகவும் உறுதியளித்தார் திருத்தந்தை.