2011-06-30 16:05:18

இந்தியாவில் ஏழைகள் எத்தனை கோடிப் பேர்: துவங்கியது கணக்கெடுப்பு


ஜூன்30,2011. இந்தியாவில் சமூக-பொருளாதரா ரீதியில் பின்தங்கியவர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்த தேசிய அளவிலான கணக்கெடுப்புப் பணி இப்புதன்கிழமை துவங்கியது.
மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி, நாட்டில் ஏழைகள், சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை தேசிய அளவில் தகவல் சேகரிக்க மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை ஆகியன இணைந்து இப்பணியை துவக்கின.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மேற்கு மாவட்டம் ஒன்றின் பழங்குடியினர் கிராமத்தில் இந்தக் கணக்கெடுப்பை இந்திய ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் பி.கே. சின்ஹா துவக்கி வைத்தார்.
ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. தற்போது துவங்கியுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, வறுமைக்கோட்டுக்கீழ் உள்ளவர்களைக் கண்டறிந்து, நலத்திட்டங்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்கான முயற்சி என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இக்கணக்கெடுப்பில், வாகனம், வீடு, வீட்டுத் தொலைபேசி, மீன்பிடிப்படகு வைத்திருப்போர், வருமான வரி செலுத்துவோர் உள்பட பல்வேறு தரப்பினர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இந்தக் கணக்கெடுப்பு 40 நாட்களில் முடிவடையும் என்றும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தவும் அரசின் மானியங்களை வழங்குவதற்கும் அந்தத் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் இந்திய அரசின் பதிவாளரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையருமான சந்திரமெளலி தெரிவித்துள்ளார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.