அருட்பணியாளர்களுக்கானச் செபமாலை பக்தி முயற்சிக்குத் திருத்தந்தை செபம்
ஜூன்24,2011. அருட்பணியாளர்களுக்காக உலக அளவில் செபிக்கப்படும் செபமாலை பக்தி முயற்சிக்குத்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது கைப்படச் செபம் எழுதியுள்ளார். இயேசுவின் திருஇதய
பெருவிழாவன்று உலகின் அனைத்து அருட்பணியாளர்களுக்காகவும் உலகெங்கும் செபமாலை செபிக்கப்படுகின்றது.
இந்தியா, இலங்கை, சீனா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உட்பட சுமார் 35 நாடுகளின் ஏறக்குறைய
48 திருத்தலங்களில் அருட்பணியாளர்களின் தூய்மையான வாழ்வுக்காக வருகிற ஜூலை ஒன்றாந்தேதியன்று
செபமாலைச் செபிக்கப்படும். அருட்பணியாளர்கள், தூய்மையான இதயத்தோடும் தெளிவான மனசாட்சியோடும்
நற்செய்தியை அறிவிக்கவும், தூய்மை, எளிமை, மகிழ்ச்சியான வாழ்வு ஆகியவற்றுக்கு அவர்கள்
எடுத்துக்காட்டாய் வாழவும் வேண்டுமென அவர்களின் தூய வாழ்வுக்காகச் செபிப்போம் எனத் திருத்தந்தை
தனது செபத்தில் குறிப்பிட்டுள்ளார்.