குற்றங்களைக் குறைக்க, இளையோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு
உருவாக்க வேண்டும் - மெக்சிகோ நாட்டு கர்தினால்
ஜூன் 22,2011. சட்டப்பூர்வமாக ஒருவரைக் குற்றவாளி என்று கூறுவதற்கான வயதை மெக்சிகோ அரசு
குறைத்துள்ளதால் குற்றங்களைத் தடுக்கவோ, குறைக்கவோ முடியாது என்று அந்நாட்டு கர்தினால்
ஒருவர் கூறியுள்ளார். குற்றங்கள் புரிவோர் சிறைக்கு அனுப்பப்பட அவர்களுக்கு குறிப்பிட்ட
வயது வரம்பு 16 என்பது மெக்சிகோவில் நடைமுறையில் உள்ளது. அந்த வயது வரம்பைக் குறைத்து
மெக்சிகோ அரசு 16 வயதுக்கும் உட்பட்டவர்களையும் சிறைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதைக்
குறித்து பேசிய Monterrey பேராயர் கர்தினால் Francisco Robles Ortega அரசின் இந்த முடிவால்
குற்றங்கள் குறையப்போவதில்லை என்று கூறினார். குற்றங்கள் புரியும் இளையோர், பெரும்பான்மையான
நேரங்களில், அந்தக் குற்றங்கள் செய்வதற்குப் பல வழிகளில் வற்புறுத்தப்படுகின்றனர் என்பதைச்
சுட்டிக்காட்டிய கர்தினால் Ortega, இவ்விளையோரை குற்றங்கள் நிகழும் சூழல்களில் இருந்து
வெளியேற்றும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அரசு உருவாக்குவதே இப்பிரச்சனைக்கு
நீண்டகாலத் தீர்வாக அமையும் என்று கூறினார்.