உலக மயமாக்கல் கொள்கைகளால் ஆசியக்குடும்பங்களில் முரண்பாடுகள் அதிகரிப்பு
ஜூன் 21, 2011. உலக மயமாக்கல் கொள்கைகளால் ஆசியக்குடும்பங்களில் புதிய சவால்கள் உருவாகியுள்ளதாகவும்,
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாகவும்
அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. உலக மயமாக்கல் கொள்கைகளின்
பாதிப்புகளாக, ஒழுக்க ரீதி, ஆன்மீக மற்றும் சமூக இணைப்பு பாலங்கள் பலவீனமடைந்து, மணமுறிவுகள்,
குடும்ப உறவுகளின் முறிவு, தனிமைப்படுத்தப்படுதல், மன நோய்கள், போதைப்பொருள் பயன்பாடு
மற்றும் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக கவலையை வெளியிடுகின்றது இந்த அறிக்கை. இணையதளம்
மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களால் கவரப்படும் குழந்தைகள் அந்த வாழ்க்கை தரத்தையும்
பொருட்களையும் பெற விரும்புவதால், பெற்றோர் அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளனர்
என, குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆசியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு
கூறுகிறது. இத்தகைய முரண்பாட்டு நிலைகளால் ஆசியாவில் சிறார்கள் வன்முறையாளர்களாக மாறும்
அபாயம், விபச்சாரத்தில் தள்ளப்படும் நிலை, பெற்றோரை மதிக்காத நிலை போன்றவை அதிகரிக்கும்
ஆபத்து இருப்பதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.