2011-06-17 14:24:58

மருத்துவரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் தற்கொலை முயற்சிகளை நியாயப்படுத்த முடியாது - அமெரிக்க ஆயர் பேரவை


ஜூன் 17,2011. மரணம் தனிமனித வாழ்வில் அச்சத்தை உருவாக்கும் ஒரு நிலை என்பதால், அந்த அச்சத்திற்கு பதில் அளிக்கும் முறையாலேயே ஒரு சமுதாயத்தின் உயர்வோ தாழ்வோ கணிக்கப்படும் என்று அமெரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.
அமெரிக்காவின் Seattle நகரில் இந்த வாரம் தன் ஆண்டுக்கூட்டத்தை நடத்தி வரும் அமெரிக்க ஆயர் பேரவை, "வாழும் ஒவ்வொரு நாளும் மதிப்புடன் வாழ" என்ற தலைப்பில் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
மருத்துவரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் தற்கொலை முயற்சிகளின் வரலாற்றை ஓரளவு அலசும் இந்த அறிக்கை, எக்காரணம் கொண்டும் இந்த மருத்துவ முயற்சிகள் நியாயப்படுத்த முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
வாழ்வில் பல காரணங்களால் சக்தியற்ற நிலைக்குத் தள்ளப்படும் மனிதர்கள் மீது சமுதாயம் தனிப்பட்ட கரிசனை காட்டுவதே அந்த சமுதாயத்தின் மேன்மையைக் காட்டும் என்று கூறும் ஆயர்கள், சக்தியற்று இருக்கும் மனிதர்கள் தற்கொலையைத் தேடும்போது, அவர்களை மீண்டும் வாழும் நிலைக்குக் கொணர்வதே சமுதாயத்தின் கடமை என்பதையும் இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கருணைக் கொலை என்ற பெயரை வழங்கி, இந்த மருத்துவ முயற்சிகளை நியாயப்படுத்துவது நன்னெறிக்கும், விசுவாசத்திற்கும் புறம்பானது என்று ஆயர்களின் இவ்வறிக்கை கூறுகிறது.









All the contents on this site are copyrighted ©.