2011-06-17 14:25:25

தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளுக்காக மூன்று நாட்கள் உண்ணா நோன்பு


ஜூன் 17,2011. இந்தியச் சட்டத்தில் பிற தலித் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்கும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த, வருகிற ஜூலை மாதம் 25 முதல் 27 முடிய மூன்று நாட்கள் உண்ணா நோன்பு இருக்கும்படி அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
"தலித் உரிமைகளுக்கு ஆம் என்று சொல்வோம், புது டில்லி நோக்கிச் செல்வோம்" என்ற முழக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த உண்ணா நோன்பில் இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைய வேண்டும் என்று NCCI எனப்படும் அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இணைந்து, NCCI தலித் உரிமைகளுக்காகப் பல முறை போராடி வந்துள்ளதென்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய தலித் தலைவர்களில் முக்கியமான மாயாவதியும், ராம்விலாஸ் பாஸ்வானும் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இந்த உரிமைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதங்கள் எழுதியிருப்பதாக UCAN செய்தி கூறுகிறது.
பாரதீய ஜனதாக் கட்சியைத் தவிர்த்து, இந்தியாவின் ஏனைய முக்கியமான அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கடிதங்கள் அனுப்பியுள்ளன என்று UCAN செய்தி மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.