திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886ம் ஆண்டு பிறந்த வாஞ்சிநாதன், ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப்
போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். பிரித்தானிய அரசை எதிர்த்து நாடெங்கும்
நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்த சமயம் அது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய
சிவா ஆகியோரின் மேடைப்பேச்சுக்களால் கவரப்பட்ட வாஞ்சிநாதன் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார்.
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த
புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. இவர் அங்கிருந்த தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார்.
காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார்.
நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட இரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும்
தீவிரம் அடையச் செய்தார். புதுவையில் புரட்சியாளர் வ.வே.சு.ஐயர் வீட்டில் இவர் தங்குவது
உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்திப்பார். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின்
இரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் இவரின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது. இந்தியர்கள்
நடத்திவந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது
வெள்ளையர் அரசு. இதற்காகப் பாடுபட்டு வந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகிய
இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இக்காரணங்களினால் திருநெல்வேலி கலெக்டராக
இருந்த ஆஷ் துரையைக் கொல்ல வாஞ்சிநாதன் முடிவு செய்தார். 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி
காலை 10.45 மணிக்கு மணியாச்சி தொடருந்து சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது
மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார்.
அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன், இரயிலில் அமர்ந்திருந்த கலெக்டர்
ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும்
சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தார். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப்
போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும். வாஞ்சிநாதன் மரணம் அடைந்த மணியாச்சி இரயில் நிலையத்திற்கு
வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்று பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் சூட்டினார்.
வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் அவரது கம்பீரமான உருவச்சிலையும் திறந்து வைக்கப்பட்டது.