கோவிலில் Gaddafiயை மறைத்து வைத்திருப்பதாகஊடகங்கள்
வெளியிட்டிருக்கும் செய்தி தவறானது - ஆயர் மார்தினெல்லி
ஜூன் 10,2011. லிபியாவின் அரசுத் தலைவர் Gaddafiயை, கோவிலில் மறைத்து வைத்திருப்பதாக
ஊடகங்கள் பொறுப்பின்றி வெளியிட்டிருக்கும் செய்திகள் குறித்து தன் வருத்தத்தை வெளியிட்டார்
Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Giovanni Innocenzo Martinelli. ஊடங்களுக்கு
வழிபாட்டுத் தலங்கள் மீது குறைந்து வரும் மதிப்பைச் சுட்டிக் காட்டிப் பேசிய ஆயர் மார்தினெல்லி,
NATO நாடுகள் கூறிய கெடுவையும் தாண்டி இந்தப் போர் நீடிக்கும் ஆபத்து உள்ளதென்று எடுத்துரைத்தார். சென்ற
பல மாதங்களாய் லிபியாவில் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போர் குறித்து தன் கவலைகளையும்
விண்ணப்பங்களையும் கூறி வரும் ஆயர் மார்தினெல்லி, அண்மையில் இத்தாலிய ஊடகங்கள் லிபியப்
போர் குறித்து பொறுப்பின்றி வெளியிட்டுள்ள செய்திகளைக் குறித்தும், தன்னைப் பற்றிய தவறானச்
செய்தியை வெளியிட்டமை குறித்தும் தன் வருத்தங்களைத் தெரிவித்தார். அரசியல் பேச்சுவார்த்தைகளே
இந்தப் போரை நிறுத்தும் ஒரே வழி என்பதை, தான் பல முறை கூறியும், அவைகளுக்குச் சிறிதும்
செவி கொடுக்காமல், படை பலத்தால் தீர்வு காண முயல்வது அப்பாவிப் பொதுமக்களை மிக அதிகமாக,
ஆழமாகப் பாதித்துள்ளதென்று ஆயர் வலியுறுத்திக் கூறினார்.