இந்தியாவில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உரிய சிறப்புச் சலுகைகளை அரசு தருவதற்கு
தடை செய்யும் அரசியல் கட்சி
ஜூன் 10,2011. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உரிய சிறப்புச் சலுகைகளை
அரசு தருவதற்கு இந்துமத ஆதரவு காட்டும் அரசியல் கட்சி ஒன்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து
வருவதை இந்தியத் திருச்சபை குறை கூறியுள்ளது. தலித் கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்க வேண்டிய
இந்த உரிமைகளைத் தடுத்து வரும் இந்த அடிப்படை வாதக் குழுக்களின் போக்கு தங்களுக்கு ஒன்றும்
புதிய அனுபவம் அல்ல என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பழங்குடியினர் மற்றும் தலித்
மக்கள் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை Cosomon Arokiaraj கூறினார். இந்தச் சிறப்புச்
சலுகைகளைக் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் கொடுத்தால், இதுவரை இந்தச் சலுகைகளைப்
பெற்று வந்த இந்துக்கள், சீக்கியர் மற்றும் புத்தர்கள் பாதிக்கப்படுவர் என்ற காரணத்தைக்
காட்டி பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் இடம் தங்கள் மறுப்பைத்
தெரிவித்துள்ளனர். இந்துத்துவ அடிப்படைவாதத்தில் தோய்ந்திருக்கும் பாரதீய ஜனதா கட்சியின்
இந்த மறுப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை ஆரோக்கியராஜ்,
கடந்த அறுபது ஆண்டுகளாய் இந்தியக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்டுள்ள இந்தப் போராட்டம் இன்னும்
தொடரும் என்று கூறினார்.