சிறைபட்டோர் மத்தியில் பணி செய்யும் கத்தோலிக்கக் குழுவினருடன் இணைந்து பணி செய்ய
விழையும் இந்தியக் காவல் துறை அதிகாரி
ஜூன் 08,2011. சிறைபட்டோர் மத்தியில் பணி செய்யும் கத்தோலிக்கக் குழுவினருடன் தானும்
இணைந்து பணி செய்ய விழைவதாக இந்தியாவில் சிறைக் காவல் பணியில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட அதிகாரி
ஒருவர் கூறினார். சிறைபட்டோர் மத்தியில் பணிபுரிவோர் துணிவோடும் கனிவோடும் மேற்கொள்ளும்
முயற்சிகள் தன்னைப் பெரிதும் கவர்ந்துள்ளதென்று குவஹாத்தி மத்தியச் சிறையில் பணிசெய்யும்
உயர் காவல் அதிகாரி P.K.Saikia கூறினார். இந்தப் பணியாளர்களின் ஆர்வத்தையும் அவர்கள்
சிறைபட்டோரிடையே செய்யும் உதவிகளையும் தான் நேரடியாகக் கண்டதால், அவர்கள் மாதத்திற்கு
ஒருமுறை மட்டுமே வருவதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாதமும் நான்கு முறை வருவதற்கு தான் ஏற்பாடுகள்
செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறினார். குவஹாத்தி சிறையில் அடைபட்டிருக்கும் 783
கைதிகளில் உண்மையிலேயே 200 கைதிகள் மட்டுமே உண்மையிலேயே குற்றவாளிகளாய் இருக்கலாம் என்றும்,
மற்றவர்கள் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் குற்றவாளிகளாய் மாறியுள்ளனர் என்றும் கூறிய அதிகாரி
Saika, சிறைபட்டோர் மத்தியில் பணிபுரியும் இக்குழுவினரைப் போன்றோரால் கைதிகள் மீண்டும்
நல்ல வாழ்வை அமைத்து கொள்ள முடியும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார். தான்
பணியில் இருந்து ஒய்வு பெற்றதும், இந்தப் பணியாளர்களுடன் இணைந்து உழைப்பதற்கு தன் விருப்பத்தை
வெளிப்படுத்திய அதிகாரி Saika, இது போன்று மற்ற மாநிலங்களிலும் இப்பணிக் குழுக்கள் செயல்படுவதை
அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.