ஐந்து நிமிடத்திற்கு ஒரு கிறிஸ்தவர் மத நம்பிக்கைக்காகக் கொலை
ஜூன் 07, 2011. ஒவ்வோர் ஆண்டும் இவ்வுலகில் தங்கள் விசுவாசத்திற்காக ஒரு இலட்சத்து
ஐந்தாயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாக ஐரோப்பிய அதிகாரி ஒருவர் கூறினார். ஹங்கேரியின்
புடாபெஸ்டில் 'கிறிஸ்தவர், யூதர் மற்றும் இஸ்லாமியர் இடையேயான உரையாடல்' என்ற தலைப்பில்
இடம்பெற்ற அனைத்துலகக் கருத்தரங்கில் உரையாற்றிய ஐரோப்பிய ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான
அமைப்பின் பிரதிநிதி Massimo Introvigne, ஒவ்வோர் ஐந்து நிமிடத்திற்கும் ஒருவர் என்ற
விகிதத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காகக் கொல்லப்படுவதாகவும் உரைத்தார்.
இது உள்நாட்டுப் போராலோ அல்லது நாடுகளிடையேயான போராலோ இடம்பெறும் மரணங்கள் அல்ல, மாறாக
மத நம்பிக்கைகளுக்காக இடம்பெறும் மரணங்கள் என்றார் அவர். கிறிஸ்தவர்களுக்கு எதிராக
உலகின் பல நாடுகளிலும் இடம்பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படாமல், மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளால்
மட்டும் எவ்வித பயனையும் அடைய முடியாது என மேலும் கூறினார் அதிகாரி Introvigne.