அயர்லாந்து திருச்சபையின் புதுப்பித்தலுக்கான பாதையில் உதவ நிறுவப்பட்ட திருப்பீடக்
குழுவின் முதல் கட்ட சந்திப்புகள் நிறைவு
ஜூன் 06, 2011. அயர்லாந்துத் திருச்சபை அதிகாரிகள் சிலரின் பாலின அடிப்படையிலான குற்றங்கள்
குறித்து விசாரிக்கவும், அத்திருச்சபையின் புதுப்பித்தலுக்கான பாதையில் உதவவும் திருப்பீடத்தால்
உருவாக்கப்பட்ட குழு அயர்லாந்தில் மேற்கொண்ட முதல் கட்ட சந்திப்புகள் நிறைவுக்கு வந்தன. அயர்லாந்துத்
தலத்திருச்சபை, துறவு இல்லங்கள், குருமடங்கள் ஆகியவை இடையேயான உறவுகள், அவைகளுக்கான ஆழமான
ஆன்மீகப் புதுப்பித்தல், பாலின வகையிலானக் குற்றங்கள் குறித்த ஆய்வுகளின் தாக்கம், பாதிக்கப்பட்டோருக்கான
உதவிகள் ஆகியவை குறித்து இக்குழு அயர்லாந்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. இவ்வாய்வுகள்
குறித்த விவரங்கள் திருப்பீடத்தின் பல்வேறு துறைகளுக்கும் தரப்பட்டுள்ளதாகவும், அனைத்து
ஆய்வுகளையும் உள்ளடக்கிய விவரம் 2012ம் ஆண்டு துவக்கத்தில் திருப்பீடத்தால் வெளியிடப்படும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.