மாற்றுத் திறன் கொண்ட இந்திய அருட்பணியாளருக்கு விருது
ஜூன் 02,2011. மாற்றுத் திறன் கொண்ட ஓர் இந்திய அருட்பணியாளர் பெருமைக்குரிய விருது ஒன்றைப்
பெறவிருக்கிறார். Daijiworld Weekly என்ற ஓர் ஆங்கில இதழ் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்
திறனுடையோர் புரியும் சாதனைகளை அங்கீகரித்து Daijiworld Weekly Swabhiman விருதுகளை வழங்கி
வருகிறது. இவ்வாண்டு ஜூன் 12ம் தேதி வழங்கப்படும் விருதுகளுக்கு மங்களூர் மறைமாவட்டத்தைச்
சேர்ந்த அருள்தந்தை Ivan Madtha தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று UCAN செய்தி கூறுகிறது. 2005ம்
ஆண்டு மும்பையில் நடந்த ஓர் இரயில் விபத்தில் ஒரு கையையும் காலையும் இழந்தவர் அருள்தந்தை
Ivan Madtha. இவர் இந்த விபத்திற்குப் பிறகு, செயற்கைக் கை, கால் இவைகளைப் பொருத்தியபடி,
தன் குருத்துவப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார். வித்தைகள் ஆற்றும் திறமை கொண்ட
அருள்தந்தை Ivan தனது வித்தை காட்சிகள் மூலம் சமுதாயத்திற்குத் தேவையான பல செய்திகளைப்
பகிர்ந்து வருகிறார் என்றும், ஒவ்வோர் ஆண்டும் இவர் குறைந்தது 100 காட்சிகள் வழியே தன்
செய்திகளை மக்களுக்கு வழங்குகிறார் என்றும் UCAN செய்தி கூறுகிறது.