2011-06-02 13:21:33

ஜூன் 03, வாழ்ந்தவர் வழியில்.....


Angelo Giuseppe Roncalli என்ற இயற்பெயரைக் கொண்ட அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான், இத்தாலியின் Sotto il Monte என்ற ஊரில் ஒரு சாதாரண வேளாண்மைக் குடும்பத்தில் 1881ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பிறந்தார். 13 சகோதர சகோதரிகளுடன் பிறந்த இவர் குடும்பத்தில் பிறந்த முதல் ஆண் குழந்தை மற்றும் நான்காவது குழந்தையாவார். 1904ல் குருவான இவர் பெர்கமோ ஆயருக்குச் செயலராகப் பணியாற்றினார்.
முதலாம் உலகப் போர் சமயத்தில் இத்தாலிய அரச இராணுவத்தில் ஆன்மீகக் குருவாகவும் மருத்துவக் குழுவுக்குப் படுக்கைகளை ஒழுங்குபண்ணுபவராகவும் இருந்தார். ஆயரான போது "கீழ்ப்படிதலும் அமைதியும்" என்பதைத் தமது விருதுவாக்காக எடுத்துக் கொண்டார். 1935ல் துருக்கி மற்றும் கிரீசுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார். அச்சமயத்தில் ஐரோப்பாவில் அடைக்கலம் தேடியிருந்த ஆயிரக்கணக்கான யூத அகதிகளுக்கு இரகசியமாக உதவி செய்தார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் 1944ம் ஆண்டு பிரான்சுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார். அச்சமயத்தில் ஜெர்மன் ஆக்ரமிப்பு அதிகாரிகளோடு ஒத்துழைத்த ஆயர்கள் ஓய்வு பெறுவதற்குப் பேச்சுவார்த்தை மூலம் வழி செய்தார். 1953ல் இத்தாலியின் வெனிஸ் முதுபெரும் தந்தையாக நியமிக்கப்பட்டார். 1958ல் திருத்தந்தை 12ம் பத்திநாதர் இறந்ததையொட்டி நடந்த பாப்பிறைத் தேர்வில், அதே ஆண்டு அக்டோபர் 28ம் தேதி திருச்சபையின் 261வது பாப்பிறையாகத தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெனிசுக்குத் திரும்புவதற்கு இரயில் பயணச் சீட்டோடு அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இவர் மிகுந்த பாசமும் நகைச்சுவையுணர்வும் அன்பும் கொண்டவர். 500 ஆண்டுகளுக்கு மேலாகத் திருத்தந்தையர் தேர்ந்தெடுக்காமல் விட்ட ஜான் என்ற பெயரை இவர் தேர்ந்தெடுத்தார். இந்தப் பெயரை இவர் தேர்ந்தெடுத்தவுடன் கர்தினால்கள் குழு மத்தியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. ஏனெனில் எதிர்த்திருத்தந்தையர்கள் இந்தப் பெயரில் முன்பு இருந்தனர். அதனால் இவர் 23ம் ஜான் என்றா அல்லது 24ம் ஜான் என்றா, எவ்வாறு அறியப்படுவார் என்ற குழப்பம் இருந்தது. அதனை இவரே தீர்த்து வைத்தார். தான் 23ம் ஜான் என்று சொல்லி இதனைத் தேர்ந்தெடுத்ததற்கானக் காரணத்தையும் விளக்கினார். இந்தப் பெயர் எனது தந்தையின் பெயர், நான் திருமுழுக்குப் பெற்ற பங்குக் கோவிலின் பெயர், இன்னும், உலகெங்கும் பல பேராலயங்கள் இப்பெயரில் உள்ளன, அத்துடன் நமது உரோம் லாத்தரன் பசிலிக்காவும் இதே பெயர்தான் என்று சொல்லி இது ஓர் இனிமையான பெயர் என்றார்.
1870ம் ஆண்டிற்குப் பின்னர் உரோம் மறைமாவட்டத்தில் பங்குகளைப் பார்வையிடச் சென்ற முதல் திருத்தந்தை இவர். உரோம் பம்பினோ ஜேசு சிறார் மருத்துவமனை, சாந்தோ ஸ்பிரித்தோ மருத்துவமனை, பின்னர் உரோம் ரெஜினா சேலி மத்திய சிறை போன்றவற்றைப் பார்வையிட்டவர். அப்போது கைதிகளிடம், நீங்கள் என்னைப் பார்க்க வரமுடியாது, எனவே நான் வந்தேன் என்று சொன்னார். இச்செயல் அச்சமயம் சர்வதேச அளவில் பெரிதாகப் பேசப்பட்டன.
கத்தோலிக்கத் திருச்சபையில் 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பொதுச் சங்கத்தைக்கூட்டி கத்தோலிக்கத்தில் மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாய் இருந்தவர். 1962ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டியவர் இவரே. ஆயினும் அது நிறைவடையும் முன்னர் Pacem in Terris அதாவது உலகில் அமைதி என்ற அப்போஸ்தலிக்கத் திருமடலை எழுதிய இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1963ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இரவு 7 மணி 49 நிமிடங்களுக்கு தனது 81வது வயதில் இறைபதம் அடைந்தார். வயிற்றுப் புற்றுநோய் காரணமாக இவர் இறந்தார். இவரின் உடல் ஜூன் 6ம் தேதி வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்திற்குக் கீழ் உள்ள பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்சமயம் இவரது உடல் அதே பசிலிக்காவில் தூய ஜெரோம் பீடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. தினமும் எண்ணற்ற மக்கள் அப்பீடத்தின் முன்னர் செபிக்கிறார்கள். 2000 மாம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி திருத்தந்தை 9ம் பத்திநாதரும் இவரும் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டனர். 4 ஆண்டுகள், 7 மாதங்கள் பாப்பிறைப் பணியில் இருந்தவர் திருத்தந்தை 23ம் ஜான் என்ற திருத்தந்தை 23ம் அருளப்பர்.
"நான் ஒரு சாதாரண, ஆண்டவருக்குப் பயந்து நடக்கும் ஏழை கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறப்பதற்குப் பெரும் பாக்கியம் பெற்றுள்ளேன். எனது இவ்வுலகநாட்கள் முடிவுறப் போகின்றன. ஆனால் கிறிஸ்து வாழ்கிறார். திருச்சபையில் தொடர்ந்து தமது பணியைச் செய்கிறார். ஆன்மாக்கள், ஆன்மாக்கள்" என்பதே அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களது கடைசி வார்த்தைகள்.








All the contents on this site are copyrighted ©.