திருத்தந்தையின் குரோவேசியத் திருப்பயணம் தங்கள் நாட்டவர் மனதில் நம்பிக்கையை வளர்க்கும்
- கர்தினால் Vinko Puljic
ஜூன் 01,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருச்சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின் குரோவேசியாவிற்கு
மேற்கொள்ளும் முதல் திருப்பயணம் தங்கள் நாட்டவர் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு தருணமாக
அமையும் என்று கூறினார் Sarajevoவின் பேராயர் கர்தினால் Vinko Puljic. வருகிற சனி
மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களும் திருத்தந்தை மேற்கொள்ளும் இந்தத் திருப்பயணம் குறித்த
அனைத்து விவரங்களையும் குரோவேசிய கத்தோலிக்க வானொலி மற்றும் மெஜுகொரே (Medjugorje) வானொலி
ஆகிய ஊடகங்களுக்கு இச்செவ்வாயன்று அளித்த பேட்டியொன்றில் கர்தினால் Puljic வெளியிட்டார். திருத்தந்தையின்
இப்பயணத்தின்போது குடும்பங்களுக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பது தனக்கு மிகவும் மகிழ்வைத்
தருகிறதென்று உரைத்த கர்தினால் Puljic, குடும்ப உறவுகள் குலைந்து வரும் இன்றையச் சூழலில்
திருத்தந்தை அளிக்கும் பல்வேறு உரைகளின் வழியாக குரோவேசிய மக்கள் குடும்ப வாழ்வின் உன்னதத்தை
மீண்டும் உணர்ந்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று சுட்டிக் காட்டினார். Bosnia
மற்றும் Herzegovina ஆகிய அண்மைய நாடுகளிலிருந்தும் பலர், சிறப்பாக இளையோர், திருத்தந்தையைக்
காண வருகின்றனர் என்று கூறிய கர்தினால் Puljic, திருத்தந்தையின் பயணம் இந்த நாடுகளில்
தற்போது சூழ்ந்துள்ள நம்பிக்கையற்றச் சூழலுக்கு ஒரு மாற்றாக இருக்கும் என்ற தன் நம்பிக்கையையும்
தெரிவித்தார்.