வாரம் ஓர் அலசல் – “வெண்புகையைத் தவிர்த்துவிடு, புன்னகையைத் தவழவிடு”
மே30,2011. ஒருவர் ஆழ்ந்த தேடல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். ஞான வேட்கை அவரிடம் நிரம்பியிருந்தது.
எதை எதைக் கேள்விப்படுகிறாரோ அதையெல்லாம் முயன்று பார்ப்போமே என்பது அவரது செயலாக இருந்தது.
பற்றுக்களைத் துறப்பதே ஞான வாயிலின் திறவுகோல் என்றனர் பலர். எனவே அவர் தனது உடைமைகள்
அனைத்தையும் உதறினார். இருக்கும் இடம் என்றுகூட பற்றுதல் வந்துவிடக் கூடாது என்பதற்காக
ஊர் ஊராக அலைந்து திரிந்தார். அப்படியும் அவர் மனம் அமைதியுறவில்லை. வழியில் ஒருவரைச்
சந்தித்தார். அவர் முகத்தில் நிலவிய சாந்தமும் கண்களில் தென்பட்ட எல்லையில்லாப் பேரானந்தமுமே
அவர் ஒரு ஜென் குரு என்பதை உணர்த்தின. இவர் அந்தக் குருவை வணங்கி, குருவே, நான் ஞானத்தைத்
தேடி அலைகிறேன் என்றார். அதற்கு ஜென் குரு அப்படியா? என்றார். ஆம். நான் பந்த பாசங்களை
உதறிவிட்டேன். உடைமைகளை உதறி விட்டேன். பற்றுக்களைத் துறந்து விட்டேன். இப்போது மனது
நிச்சலனமாய் இருக்கிறது என்றார். அதற்கு ஜென் குரு, அப்படியா! சரி, அதையும் விட்டுவிடு
என்றார். அவருக்குப் பெரும் திகைப்பு. குருவே, நான்தான் எல்லாவற்றையுமே விட்டுவிட்டதாகச்
சொன்னேனே, இப்போது எனது மனதில் வெறுமைதானே குடிகொண்டு இருக்கிறது? என்று கேட்டார். சரி,
அதையும் விட்டுவிடு என்றார் ஜென் குரு. அதை எப்படி விடமுடியும்? சுவாமி என்றார் அவர்.
விட முடியாதா அப்படியானால் அதனைச் சுமந்து கொண்டு திரி என்றார் ஜென் குரு. அன்பர்களே,
இதைத் துறந்து விட்டேன், அதை உதறி விட்டேன், அந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்தி விட்டேன்
என்று சும்மாப் பேசிக் கொண்டிருப்பவர்களால் எதையும் உதற முடியாது, எதனின்றும் விலகவும்
முடியாது என்கிறது இந்த ஜென் கதை. அப்படித்தான் நண்பர் ஒருவர் எப்பொழுதும் சிகரெட்டும்
கையுமாக இருப்பார். திடீரென ஒரு நாள் வந்து நான் சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டேன் என்றார்.
நானும், சரி நல்லது என்றேன். அடுத்த நாள் பீடியோடு வந்தார். என்ன இது என்று கேட்டால்
சிகரெட்டை விட்டுவிட்டேன், அவ்வளவுதான் என்றார். அப்புறம் சொன்னார் இன்றோடு பீடியையும்
விட்டுவிடுவேன் என்று. ஆனால் அடுத்த நாள் சுருட்டோடு வந்தார். அதற்கு அடுத்த நாள் புகைக்
குழாயோடு வந்தார். பின்னர் புகையிலையை வாயில் அடக்கிக் கொண்டு வந்தார். அப்போது எனக்கு
ஒன்று மட்டும் புரிந்தது. இந்த எனது நண்பருக்குப் புகைப்பதை விடுவது கடினம் என்று. உண்மைதான்.
எந்தப் பழக்கத்தையும் திடீர் என்று விடுவது எளிதல்ல. ஆனால் விட்டுவிடலாம். ஏனெனில் அப்படி
விட்டுவிட்ட பலரைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். வெகுநாட்பட்ட
ஒரு பழக்கத்தை விட்டுவிட வேண்டுமானால் முதலில் அப்பழக்கத்தால் வரும் தீமைகள் பற்றித்
தெரிந்திருக்க வேண்டும். பின்னர் அப்பழக்கத்தை எப்படி விட்டுவிடுவது என்பதும் பற்றியும்
அறிந்திருக்க வேண்டும். புகையிலை பயன்படுத்துவதால் ..... 1. வாய், தொண்டை, நுரையீரல்,
வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களைப்
புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது. 3. புகைத்தல் திடீரென இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது
மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவினைக் குறைக்கிறது. 4. புகையிலை, கால்களுக்கு
செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில் காங்கரின் எனப்படும்
கால் மாமிசத்தை அரித்துவிடும் மற்றும் புண்களையும் ஏற்படுத்தக்கூடும். 5. புகையிலை, உடல்
முழுவதிலும் உள்ள தமனி எனப்படும் இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக்குழாய் சுவர்களைச்
சேதப்படுத்துகிறது. 6. புகைத்தல், சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு
உடல்நலக்கேட்டினை ஏற்படுத்துகிறது. புகைப்பழக்கமில்லாத ஒருவர், புகைப்பழக்கம் உள்ளவரோடு
சேர்ந்து வாழும்போது, புகைபிடிக்காத நபர் அவரை அறியாமலேயே மூன்று சிகரெட்டினை புகைக்கிறார்.
7. புகையிலைப் பயன்பாடு நீரழிவு நோய்ப் பாதிக்கும் அபாயத்தை அதிகரிக்கிற காரணியாக அமைகிறது.
8. புகையிலை, இரத்தத்திலுள்ள நன்மை பயக்கக்கூடிய கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. 9. புகைபிடிப்பவர்கள்
மற்றும் புகையிலைப் பயன்படுத்துபவர்களுக்கு, அதைப் பயன்படுத்தாதவர்களைவிட இதயநோய் மற்றும்
பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது. எனவே இத்தகைய ஆபத்துக்களிலிருந்து
காப்பாற்றிக் கொள்ள விரும்பும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள அனைவரும்....... முதலாவதாக,
சிறிது நாட்களுக்குப் புகைப்பிடிக்கும் நண்பர்களை விட்டு விலகி இருங்கள். அதனால் புகைப்பிடிக்க
வேண்டுமென்ற ஆசை குறையும். அப்பழக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டாம் என்ற எண்ணமும் தோன்றும்.
இரண்டாவதாக, புகைப்பிடிப்பதை எதிர்த்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு
மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பயன்படும். மூன்றாவதாக, தினமும் இரண்டு தடவைகள் குளியுங்கள்.
முதலில் வெது வெதுப்பான நீரிலும் பின்னர் குளிர்ந்த நீரிலும் என இப்படி மாற்றி மாற்றிக்
குளியுங்கள். நான்காவதாக, தினமும் உடற்பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் செய்யுங்கள்.
ஐந்தாவதாக, சாப்பாடு மிதமாக இருக்குமாறு கவனித்துக் கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகள்
பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் நரம்புகள் அமைதிப்படும். இரத்தத்திலுள்ள
சர்க்கரையும் குறையும். ஆறாவதாக, அதிக நேரம் பசியோடு இருக்கக் கூடாது. ஏழாவதாக, காபி,
தேனீர், மதுபானம், போதைப்பொருள் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். மாறாக, தினமும் தண்ணீர்
அதிகம் குடியுங்கள். எட்டாவதாக, அலமாரியில் சிகரெட்டு டப்பாக்கள் இருந்தால் அவற்றைத்
தூக்கி எறிந்து விடுங்கள். ஒன்பதாவதாக, உங்களுக்கு விருப்பமானவர்களிடம் புகைப்பதை நிறுத்தி
விட்டதாகச் சொல்லுங்கள். கடைசியாக, புகைப்பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம் இறைவனிடம்
மன்றாடுங்கள். நீங்கள் நம்பும் கடவுள் உங்களது நல்ல முயற்சிக்கு நிச்சயம் கைகொடுப்பார். அன்பர்களே,
இன்று புகைப்பிடித்தல் பற்றிப் பேசுகிறோமே என்று சிந்திக்கிறீர்களா, ஆம். மேமாதம் 31ம்
தேதி இச்செவ்வாய் புகையிலையையும் புகைத்தலையும் தவிர்ப்பதற்கு அழைப்பு விடுக்கும் உலக
நாள். புகையிலைக் கட்டுப்பாடுக் குறித்து WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் உடன்பாடு
பற்றி இவ்வாண்டு இந்த நாளில் வலியுறுத்தப்படுகிறது. உலகத்தைப் புகைப்பிடித்தல் இல்லாத
இடமாக மாற்ற வேண்டும் என்பதே இந்த அனைத்துலக நாளின் நோக்கமாகும். ஏனெனில் உலகில் இடம்
பெறும் இறப்புக்களில் தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் ஏற்படும் இறப்புக்களுக்குப் புகையிலை
முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இது தொடர்பான மாரடைப்பு தாக்குதலால் இவ்வாண்டில்
ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்டோர் இறப்பார்கள். இவர்களில் 25 விழுக்காட்டுக்கு அதிகமானோர்
சிறார். ஆனால் இவர்கள் இவ்வெண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்தச் சிறார்
புகைப்படிப்பவர் அருகில், புகைப்படிக்கும் இடங்களில் இருப்பதால் பாதிக்கப்படுகிறவர்கள்.
புகையிலைப் பயன்பாடு தொடர்புடைய நோய்களால் ஏற்படும் இறப்புகள் 2030ம் ஆண்டில் உலகில்
80 இலட்சமாக உயரக்கூடும். இத்தகைய நோய்களால் 20ம் நூற்றாண்டில் பத்துக் கோடிப் பேர் இறந்தனர்.
இந்த 21ம் நூற்றாண்டில் நூறு கோடிப் பேர் இறப்பார்கள் என்றும் WHO நிறுவனம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட
பெண்கள் இதனால் இறக்கின்றனர். இலங்கையில் தொற்று நோயல்லாத வேறு நோய்களினால் தினமும்
400 பேர் வரையில் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் தற்போதைய நிலைமையில் இளைஞர்கள்தான் அதிகமாக
புகையிலையைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களில் 26 விழுக்காட்டினர் புகைப்பிடிக்காத, ஆனால்
மற்ற வழிகளில் புகையிலையைப் பயன்படுத்துபவர்கள். உலகிலே வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்
அதிக அளவில் வாழ்வது இந்தியாவில்தான், இவ்வெண்ணிக்கை 80 முதல் 90 விழுக்காடுவரை இருக்கும்
என்ற அதிர்ச்சிகரமான உண்மைகளையும் WHO நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்பிடிக்கும்
பழக்கத்திற்கு மனஅழுத்தமே முக்கிய காரணம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. நண்பர்கள் வட்டம்,
வாழ்க்கையில் சலிப்பு, இன்பம், களியாட்டம் போன்ற காரணங்களும் இத்துடன் இணைகின்றன. வாழ்க்கையில்
மனஅழுத்தம் ஏற்படுவது மிகவும் கொடுமையானது. ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிகவேலை,
அதிக அக்கறை, குழப்பம் ஆகிய இவையெல்லாம் மனஅழுத்தம் ஏற்படக் காரணமாகின்றன. ஒருசிலருக்கு
அதிக வெளிச்சம் மற்றும் அதிகச் சப்தம்கூட மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள்
கூறுகின்றனர். புகைப்பிடித்தல், சரியான உணவுப்பழக்கம் இல்லாமை, போதைப் பழக்கம், சரியான
தூக்கமின்மை ஆகியவையும் இதனை விலை கொடுத்து வாங்குகின்றன. ஆவேசம், கோபம் இவை மனஅழுத்தத்தின்
வெளிப்பாடுகள். ஒற்றைத்தலைவலி, அஜீரணக் கோளாறுகள், தசைப்பிடிப்பு, நெஞ்சுவலி, உடல் எடை
அதிகரித்தல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், ஸ்ட்ரோக், தோல் நோய்கள், ஒவ்வாமை, சர்க்கரை நோய்
என பல நோய்கள் தாக்கவும் மனஅழுத்தம் காரணமாக அமைகின்றது. எனவே அன்பர்களே, மனதின்
சிந்தனைகளைத் தூய்மைப்படுத்துவோம். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்ப்போம். நல்ல சிந்தனைகளை
வளர்த்துக் கொள்வோம். மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா போன்றவை மூலம் மனதை ஒருமுகப்படுத்துவோம்.
இன்பமோ துயரமோ நோயோ வேதனையோ குழப்பமோ எச்சூழலிலும் இறைவனில் ஆழமாக நம்பிக்கை வைத்து வாழ்வோம்.
அப்போது மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவோம். அப்போது உடலும் மனமும் சுகமாக இருக்கும்.
வாழ்க்கையில் வெண்புகையைத் தவிர்த்துப் புன்னகையைத் தவழ விடுவோம்.