மத்தியப் பிரதேசக் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் அரசுக்கு எதிராக நீதி மன்றத்தை அணுக
உள்ளன
மே 30,2011. மத்தியப் பிரதேச மாநில அரசின் தேவையற்ற தலையீட்டால் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின்
உரிமைகள் பாதிக்கப்படுவதால், உயர் நீதி மன்றத்தை அணுக வேண்டிய தேவை தலத்திருச்சபைக்கு
ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார் பேராயர் லியோ கொர்னேலியோ. ஆறு வயதிற்கும் 14 வயதிற்கும்
உட்பட்ட சிறார்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கவேண்டும் என்ற மத்திய அரசின்
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் காரணம் காட்டி, கத்தோலிக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தில்
அரசு தலையிடுவதாக குற்றம் சாட்டிய போபால் பேராயர் கொர்னேலியோ, யார் யார் பள்ளியில் சேர்க்கப்படவேண்டும்
என்பதில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் தலையிடுவதுடன், கல்வி நிறுவனங்களின் முடிவுகள் எடுக்கும்
அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு தர வேண்டும் என வலியுறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார். தரமானக்
கல்வியை வழங்கவேண்டும் என்ற நோக்குடன் செயல்படும் கத்தோலிக்க நிறுவனங்கள், அரசின் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகி வருவதாகவும் கவலையை வெளியிட்ட அவர், நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகவேண்டிய
நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.