குரோவேசிய நாட்டிற்கான பயணத்தின் போது குடும்பம் மற்றும் இளையோர் பிரச்னைகளுக்குத் திருத்தந்தை
முக்கியத்துவம் வழங்குவார்
மே 28, 2011. துன்பகரமான வேளைகளில் தங்கள் விசுவாசத்தைக் காப்பாற்றியும், திருப்பீடத்துடன்
எப்போதும் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியும் வந்துள்ள குரோவேசிய நாட்டிற்குத் திருத்தந்தை
பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றார் திருப்பீடப்பேச்சாளர் அருட்திரு
ஃபெதெரிக்கோ லொம்பார்தி. வரும் சனி மற்றும் ஞாயிறு குரோவேசியாவில் இடம்பெற உள்ள திருத்தந்தையின்
திருப்பயணம் குறித்து கருத்துக்களை வெளியிட்ட இயேசு சபை குரு லொம்பார்தி, மதச்சார்பற்ற
நிலைகளின் சவால்களை எதிர்நோக்கி வரும் இந்நாட்டில், குடும்பம் மற்றும் இளையோர் பிரச்னைகளுக்கு
தன் பயணத்தின் போது திருத்தந்தை அதிக முக்கியத்துவம் வழங்குவார் என்றார். தனி நாடாகச்
சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகளுக்குப்பின் தற்போது இவ்வாண்டில் ஐரோப்பிய ஐக்கிய அவையில்
இணைய உள்ள குரோவேசியாவில் ஜூன் 5ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தேசிய குடும்ப
நாள் கொண்டாட்டங்களில் பங்குகொள்ள உள்ளார் திருத்தந்தை.