பாகிஸ்தான் பைசலாபாத் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள்
மே 27,2011. பாகிஸ்தான் பைசலாபாத் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லறை பூமியை டிராக்டர்களைக்
கொண்டு தகர்த்து அந்நிலத்திற்கு உரிமைக் கொண்டாட ஒரு சில இஸ்லாமியர்கள் அண்மையில் முயன்றுள்ளனர். இதற்கிடையே,
Afshan Sabir என்ற 29 வயதுடைய ஓர் இளம் கிறிஸ்தவத் தாயைப் போதைக்குள்ளாக்கி, ஒரு குழுவினர்
அவரைப் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்ற செய்தியும் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த
வன்முறைச் செயல்களைத் தீர விசாரிக்க பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் நீதி மற்றும்
அமைதி பணிக்குழுவின் உறுப்பினர்கள் நேரடியாக அப்பகுதியில் தகவல்கள் திரட்டச் சென்றுள்ளனர்
என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது. காவல் துறையினர் இந்த வன்முறைகளைக் கண்டும்
காணாமல் இருப்பதால் தீவிரவாத இஸ்லாமியக் குழுக்கள் இதுபோன்ற செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர்
என்று பைசலாபாத் பகுதியில் பணி புரியும் அருள்தந்தை ஜோசப் ஜமில் கூறினார். மேலும்
இச்செவ்வாயன்று இரு கிறிஸ்தவ பெண்கள் ஓர் இஸ்லாமிய வியாபாரியால் கடத்தப்பட்டுள்ளனர் என்றும்,
இப்பெண்கள் இஸ்லாமியர்களாக மாறி தன்னை மணமுடிக்கும்படி இந்த வியாபாரி வற்புறுத்தி வருகிறார்
என்றும் தெரிய வந்துள்ளது.