சீனத் திருச்சபைக்கான செப நாளில் இறையன்னையின் திருத்தலத்தில் திருப்பலி நடத்துவதற்கு
சீன அரசு தடை
மே 25,2011. இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட சகாய அன்னை திருநாளை சீனத் திருச்சபைக்காக
சிறப்பான செபங்களை எழுப்பும் நாளாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்ததையடுத்து உலகின்
பல நாடுகளிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சிறப்புச் செப நாளில்
சீனாவின் Sheshan எனுமிடத்தில் உள்ள நமது இறையன்னையின் திருத்தலத்தில் திருப்பலி நடத்துவதற்கு
சீன அரசு தடை விதித்திருந்தது. சீனத் திருச்சபைக்குச் செபங்களை எழுப்பும் நாளாக இந்த
நாளை திருத்தந்தை அறிவித்தது குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட அருள்தந்தை Pietro Cui,
இந்த அறிவிப்பின் மூலம் தன் குழந்தைகள் மீது தனி அன்பு காட்டும் ஒரு தந்தையாகத் திருத்தந்தை
விளங்குகிறார் என்றார். Sheshanல் உள்ள மரியன்னையின் திருத்தலத்திற்கு மேமாதம் 24ம்
தேதி பல திருப்பயணிகள் வருவது வழக்கம் என்றும், இவ்வாண்டு பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்
வண்ணம் திருத்தலத்தைச் சுற்றி சீன அரசு இராணுவ வீரர்களை நிறுத்தியிருந்தென்றும் செய்திக்
குறிப்பொன்று கூறுகிறது.