உலகநல நிறுவனத்தின் 64வது பொது அவையில் நலவாழ்வுப் பணிகளுக்கான திருப்பீட அவையின்
தலைவர் ஆற்றிய உரை
மே 25,2011. செல்வம் நிறைந்த நாடுகள் வறுமைப்பட்ட நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வராவிடில்,
அந்நாட்டு மக்களின் நல வாழ்வு முன்னேற்றம் வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்று வத்திகான்
அதிகாரி ஒருவர் கூறினார். Genevaவில் இச்செவ்வாயன்று நிறைவுபெற்ற உலகநல நிறுவனத்தின்
64வது பொது அவையில் உரையாற்றிய நலவாழ்வுப் பணிகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர்
Zygmunt Zimowski இவ்வாறு கூறினார். 2010ம் ஆண்டுக்கான அகில உலக நலவாழ்வு அறிக்கையைச்
சுட்டிக்காட்டி உரையாற்றிய பேராயர் Zimowski, அனைத்துலகிலும் மக்கள் நலவாழ்வுக் காப்பினைப்
பெறுவதில் நாம் இன்னும் மிக அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று எடுத்துரைத்தார். HIV
நோய் குறித்து இவ்வுலகம் இன்னும் தகுந்த பாடங்களைப் படிப்பது தேவையென்றும், பொறுப்புள்ள
வாழ்வு முறை, மற்றும் பழக்க வழக்கங்களில் நாம் கொள்ளும் மாற்றங்களே இந்த நோயை உலகிலிருந்து
முற்றிலும் தீர்ப்பதற்கான வழி என்பதையே வத்திக்கான் எப்போதும் வலியுறுத்தி வருகிறதென்று
பேராயர் Zimowski சுட்டிக்காட்டினார்.