அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவராக கர்தினால் Maradiaga இரண்டாம்
முறையாகத் தேர்வு
மே 25,2011. கத்தோலிக்கப் பிறரன்புச் சேவைகளில் ஈடுபடுவோர், இச்சேவைகள் கிறிஸ்தவ படிப்பினைகளை
பிறர் மீது புகுத்தும் வழிகள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்
கர்தினால் Oscar Rodriguez Maradiaga. உரோம் நகரில் இஞ்ஞாயிறு முதல் வெள்ளி வரை நடந்து
வரும் 19வது அகில உலகக் காரித்தாஸ் பொதுஅவையில் அனைத்துலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவராக
இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Honduras நாட்டைச் சேர்ந்த கர்தினால் Maradiaga,
கிறிஸ்தவப் பிறரன்புப் பணிகளின் தூய்மையைக் குறித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார். தூய
அன்புக்கு இலக்கணமாகத் திகழும் கடவுளின் பணிகளில் ஈடுபடும்போது, அதுவே கடவுளுக்கு உகந்த
சாட்சிய வாழ்வு என்று கூறிய திருத்தந்தையின் கருத்துக்களை நினைவுபடுத்தி பேசிய கர்தினால்
Maradiaga, இவ்வன்புப் பணிகளே மக்களை இறைவனிடம் கொண்டு வந்து சேர்க்கும் வலிமை பெற்றவை
என்று எடுத்துக் கூறினார். 165 நாடுகளில் கத்தோலிக்கப் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்
காரித்தாஸ் அமைப்பில் இன்னும் அதிக அளவில் ஆயர்கள் பங்கேற்க வேண்டுமென்று வத்திக்கான்
விழைவதாகவும் கர்தினால் Maradiaga எடுத்துரைத்தார்.