சர்வதேசக் காரித்தாஸ் அமைப்பின் பொதுஅவைக் கூட்டத்தில் திருப்பீடச் செயலரின் மறையுரை
மே 23,2011. இயேசு கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபையின் மற்றும் இறைமக்களின் பிறரன்புப்
பணிகளின் அமைப்புமுறைச் சார்ந்த அடிப்படைக் கூறின் ஒரு பகுதியே சர்வதேசக் காரித்தாஸ்
அமைப்பு என்றார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே. சர்வதேசக்
காரித்தாஸ் அமைப்பின் 19வது பொதுஅவைக் கூட்டத்தை இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றி துவக்கிவைத்து
மறையுரை ஆற்றிய கர்தினால் பெர்த்தோனே, திருச்சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அன்பின்
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டினார். தங்கள் வாழ்விற்கான
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழியில்லாமல் எவரும் துன்புறக்கூடாது என்பதையும் எடுத்துரைத்த
கர்தினால் பெர்த்தோனே, முழு மனித மாண்பிற்கானப் பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பினார். ஏழைகளின்
உரிமைகள் பாதுக்கப்பட்டு, முன்னேற்றப்பட வேண்டியதன் அவசரத் தேவையை அங்கீகரிக்கும் சர்வதேசக்
காரித்தாஸ் அமைப்பு, ஏழைகளை நம் சகோதர, சகோதரிகளாகக் கண்டு ஏற்றுக் கொள்ள நமக்கு உதவுகிறது
என்று மேலும் எடுத்துரைத்தார் திருப்பீடச் செயலர்.