மறைந்து வாழும் சீன கிறிஸ்தவ சபைகள் மத உரிமை கேட்டு விண்ணப்பம்
மே 21, 2011. சீன அரசின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் வீடுகளிலேயே மறைவாக வழிபாடுகளை
நடத்த தள்ளப்பட்டுள்ள அந்நாட்டு கிறிஸ்தவ அமைப்புகள் சில இணைந்து, மத உரிமை கேட்டு பாராளுமன்றத்திற்கு
விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளன. சீனாவின் கடந்த 60 ஆண்டுகால கம்யூனிச அடக்குமுறை
ஆட்சியில் இத்தகைய மதச்சுதந்திர விண்ணப்பம் ஒன்று பாராளுமன்றத்திற்கு சீனக்கிறிஸ்தவர்களாலேயே
விடப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். வழிபாட்டிற்கென இடத்தை வாங்க 'சௌவாங் கிறிஸ்தவ
சபை' என்ற குழுவிற்கு சீன அரசு அனுமதி மறுத்து வருவதால், திறந்த வெளிகளில் வழிபாடுகளை
நடத்தி அரசின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதைத் தொடர்ந்து, இவ்விண்ணப்பம் சீனப் பாராளுமன்றத்திற்கு
அனுப்பப்பட்டுள்ளது. இந்த துணிச்சலான முயற்சிக்கு அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கானடாவில்
பணிபுரியும் சீன கிறிஸ்தவ குருக்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.