ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தாலும், கிறிஸ்தவர்களின்
எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது- கட்டக் புபனேஸ்வர் பேராயர்
மே 20,2011. ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன, எனினும் அங்குள்ள
மக்களின் விசுவாசம் வளர்ந்து வருவதோடு, அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும்
உயர்ந்து வருகிறது என்று கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு முறை திருத்தந்தையைச் சந்திக்கும் 'Ad Limina' சந்திப்பையொட்டி வத்திக்கான் வந்திருக்கும்
கட்டக் புபனேஸ்வர் பேராயர் பார்வா FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில்
இவ்வாறு குறிப்பிட்டார். கிறிஸ்தவ மதம் எப்போதும் இரத்தம் சிந்தும் நேரங்களில் விசுவாசத்தில்
வளர்ந்துள்ளது என்ற வரலாற்றிற்கு ஏற்ப, ஒரிஸ்ஸாவிலும், 2008ம் ஆண்டு நடந்த வன்முறைகளால்
அங்குள்ள கிறிஸ்தவர்களின் விசுவாசம் இன்னும் ஆழப்பட்டுள்ளது என்று பேராயர் கூறினார். தலித்
மற்றும் பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாய் அடிமைகளாய் நடத்தப்பட்டு வந்த ஒரிஸ்ஸா மாநிலத்தில்
கிறிஸ்தவப் பணியாளர்கள் அம்மக்களிடையே மனித உரிமைகள், மனித மதிப்பு ஆகிய எண்ணங்களைப்
புகுத்தி வருவது பாரம்பரிய இந்து சாதிய அமைப்பிற்கு பெரும் சவாலாக இருப்பதே இந்த வன்முறைகளின்
முக்கிய காரணம் என்று பேராயர் பார்வா தன் பேட்டியில் சுட்டிக் காட்டினார். கந்தமால்
பகுதியில் ஏற்பட்ட கலவரங்களுக்குக் காரணமான 13 பேருக்கு அம்மாநிலத்தில் இயங்கும் துரித
நீதி மன்றம் இப்புதனன்று ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியுள்ளது என்றும், அதே
நேரம் மற்றொரு நீதி மன்றம் குற்றம் சுமத்தப்பட்ட வேறு 12 பேரை விடுதலை செய்துள்ளதென்றும்
UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.