Endosulfan பூச்சிக்கொல்லி மருந்தைக் கேரளாவில் முற்றிலும் தடை செய்திருப்பதற்கு
தலத்திருச்சபை தலைவர்கள் வரவேற்பு
மே 20,2011. கேரளாவில் அண்மையில் பொறுபேற்றுள்ள புதிய அரசு தங்கள் மாநிலத்தில் endosulfan
என்ற பூச்சிக்கொல்லி மருந்தை முற்றிலும் தடை செய்திருப்பதை அம்மாநிலத்தின் தலத்திருச்சபை
தலைவர்களும், இன்னும் பிற சமுதாய ஆர்வலர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். கடந்த 25
ஆண்டுகளாக endosulfan மருந்தை பூச்சி கொல்லியாக அரசு பயன்படுத்தி வந்துள்ளதால், கேரளாவில்
இதுவரை 486 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இன்னும் பல ஆயிரம் பேர் கடினமாகத் தாக்கப்பட்டிருப்பதாகவும்
UCAN செய்தி கூறுகிறது. Endosulfanஐ தடை செய்த ஒருங்கிணைந்த மக்களாட்சி முன்னணி அரசு,
இம்மருந்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இழப்புத் தொகையை இருமடங்காக
உயர்த்தியுள்ளதென்றும் அறிவித்துள்ளது. அரசின் முடிவுகள் வரவேற்கத் தக்கது என்று கூறிய
திருவனந்தபுரம் இலத்தீன் ரீதி பேராயர் மரிய சூசைப் பாக்கியம், வேளாண்மையில் பயன்படுத்தப்படும்
பல்வேறு பூச்சிக்கொல்லிகளைப் பற்றி அரசு சரியான நடைமுறை விதிகளை கொண்டு வர வேண்டுமென்று
வலியுறுத்தினார்.