2012 உலக அமைதி தினத்திற்கான தலைப்பு, 'நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கற்பித்தல்'
மே 19,2011. வரும் ஜனவரி முதல் தேதி அகில உலக திருச்சபையில் கொண்டாடப்படவிருக்கும் உலக
அமைதி தினத்திற்கென 'நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கற்பித்தல்' என்பதை தலைப்பாக
எடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 2012ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி சிறப்பிக்கப்பட
உள்ள 45வது உலக அமைதி தினத்திற்கென திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள இத்தலைப்பு, பொதுநலனுக்காக
உழைப்பதிலும் அடிப்படை மனித உரிமைகளைப் பெறவல்ல நீதியும் அமைதியும் நிறைந்த சமூக ஒழுங்கை
உறுதி செய்வதிலும் இளையோரின் முக்கிய பங்கை வலியுறுத்துவதாக இருக்கும் என்கிறது திருப்பீடத்தின்
நீதி மற்றும் அமைதி அவை வெளியிட்ட அறிக்கை. வருங்காலச் சமூகம் சுதந்திரமாகவும் பொறுப்புணர்வுடனும்
செயல்படுவதற்கு ஏதுவான புதியதோர் உலகைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் சூழல்களை உருவாக்கித்
தரவேண்டியது இன்றைய தலைமுறையின் கடமையாகிறது எனவும் கூறுகிறது இவ்வறிக்கை. இளையோரை
வசந்த கால நம்பிக்கைகளின் அடையாளமாக திருச்சபை பார்ப்பதாகவும், அவர்களுக்கான உண்மை, சுதந்திரம்,
அன்பு, நீதி போன்றவைகள் குறித்த ஆழமான விழிப்புணர்வை வழங்கவல்ல சகோதரத்துவ அன்புடன் கூடிய
கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய அனைவரின் கடமையையும் வலியுறுத்தி உள்ளது நீதி மற்றும்
அமைதிக்கான திருப்பீட அவை.