2011-05-18 16:06:46

சிறைக் கைதிகளுக்குத் திருப்பலி நிகழ்த்திய இந்தோனேசியாவின் ஆயர்


மே 18,2011. "நான் சிறையில் இருந்தேன்; என்னைக் காண நீ வரவில்லை என்று இயேசு கூறியது என் மனதில் ஒலித்ததால், உங்கள் உள்ளங்களில் குடியிருக்கும் இயேசுவைக் காண நான் இங்கு வந்துள்ளேன்" என்று இந்தோனேசியாவின் ஆயர் ஒருவர் கூறினார்.
இந்தோனேசியாவின் Nusakambangan என்ற தீவில் அமைத்துள்ள மிக அதிகப் பாதுகாப்புச் சிறையில் உள்ள கைதிகளுக்கு இத்திங்களன்று திருப்பலி நிகழ்த்திய இயேசு சபையைச் சார்ந்த ஆயர் Julianus Sunarka, அங்குள்ள கைதிகள் எவ்வளவு ஆழமான குற்றங்கள் புரிந்திருந்தாலும், இறைவன் அவர்களை மன்னிக்கக் காத்திருக்கிறார் என்று கைதிகளிடம் எடுத்துரைத்தார்.
ஆயரின் வருகையும், அவர் ஆற்றியத் திருப்பலியும் சிறையில் உள்ள கைதிகளுக்குப் பெரும் ஆறுதலையும், ஊக்கத்தையும் அளித்துள்ளதென்று சிறை அதிகாரி Jose Koelo கூறினார்.இந்தியப் பெருங்கடலில் ஜாவா தீவுக்கருகே அமைத்துள்ள Nusakambangan தீவின் மிக அதிகப் பாதுகாப்புச் சிறையில் பெரும் குற்றங்கள் புரிந்தவர்களும், மரண தண்டனைக்கு உள்ளானவர்களும் மட்டும் வைக்கப்பட்டுள்ளனர் என்று UCAN செய்தி கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.