அரசியல்வாதிகளுக்காக தங்களுடன் இணைந்து செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர் நேபாள மதத்தலைவர்கள்.
மே 17, 2011. நேபாளத்தில் இடம்பெற்றுவரும் அரசியல் நிலையற்ற தன்மைகளை எதிர்கொள்ளும்
மக்கள் பிறரைக் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அரசியல்வாதிகளுக்காகத் தங்களுடன் இணைந்து
செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு மதத்தலைவர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக
புதிய அரசியலமைப்பை வடிவமைப்பதில் தங்களை ஈடுபடுத்தியும் வெற்றி காணாத நேபாள அரசியல்வாதிகள்,
தங்கள் செயல்பாடு குறித்து வெட்கப்பட வேண்டும் என அறிவித்த அந்நாட்டின் கிறிஸ்தவ, இந்து,
இஸ்லாம் மற்றும் புத்தமதப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகளுக்காக ஒன்றிணைந்து செபிக்கவேண்டியதன்
அவசியத்தையும் வலியுறுத்தினர். நேபாளத்தின் பல்வேறு மதங்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாய்
வாழ்வதைக் காணும் மக்கள், இன ரீதியாக பிரிவினைகளை வேண்டுவதைக் கைவிட்டு ஒற்றுமையில் வாழ
முன்வரவேண்டும் என மேலும் அழைப்பு விடுத்தனர் மதப்பிரதிநிதிகள். நாட்டின் வருங்காலத்தை
வடிவமைப்பதில் மதத்தலைவர்களின் ஆலோசனைகளும் பெறப்படவேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு
இளைஞர்களில் எழவேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.