இலங்கைப் போர்குற்றம்: ஐ.நா.வுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
மே 14, 2011. இலங்கைப்போரின்போது இலங்கை அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பும் மனித உரிமை
மீறல்களில் ஈடுபட்டதாக ஐ.நா. அவையின் சமீபத்திய அறிக்கை கண்டறிந்திருப்பதால், இது குறித்து
முழுமையான, நடுநிலையுடன் கூடிய, வெளிப்படையான புலனாய்வு நடத்தப்படவேண்டுமென ஐரோப்பிய
ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில்
ஐ.நா. அறிக்கை வழங்கியுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,
இது குறித்த நேர்மையான புலனாய்வு செய்ய இலங்கை முன்வர வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய
நாடாளுமன்றம் தனது தீர்மானத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளுடனான இலங்கை
அரசின் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இலங்கையில் வாழும்
தமிழர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசு எடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய
நாடாளுமன்றம் கேட்டுக்கொள்வதாக இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்
மூலம் சிங்களவர்களுக்குச் சமமான ஒளிமயமான, செழிப்பான வாழ்வை தாங்களும் வாழ முடியும் என்கிற
நம்பிக்கையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின்
தீர்மானம் இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.