மியான்மாரில் சமய சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர்ச்சி
மே 13,2011. மியான்மாரில் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் அதிகம் கிடைக்கக்கூடும்
என்று தலத் திருச்சபை தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ளது. மியான்மாரில் நிலவி வந்த இராணுவ
ஆட்சி விலகி, கடந்த மார்ச் மாதம் மக்களாட்சி மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதால், சமய சுதந்திரம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையை அங்குள்ள குருக்கள் இப்புதனன்று வெளிப்படுத்தினர். கிறிஸ்தவக்
கோவில்கள் கட்டுவதற்கும், பொது இடங்களில் கிறிஸ்தவ விழாக்கள் கொண்டாடுவதற்கும் தடைகள்
இருந்தாலும், வழிபாட்டுத் தலங்களில் தங்கள் விசுவாசத்தை வளர்க்கும் முயற்சிகளை தற்போதைய
அரசு தடை செய்யாமல் இருப்பதே ஒரு பெரும் முன்னேற்றம் என்று அருள்பணியாளர்கள் கூறினர்.அகில
உலக மதச்சுதந்திரம் குறித்த அமெரிக்கக் குழுவொன்று அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில்,
எகிப்து, பாகிஸ்தான், சீனா, வியட்நாம், சவுதி அரேபியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை
மதச்சுதந்திரம் மிகவும் குறைந்துள்ள நாடுகளாக அறிவித்துள்ளது.