பாப்பிறை அறிவியல் கழகம் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை
மே 13,2011. துரித கதியில் செல்லும் அறிவியல் முன்னேற்றங்களால் பனிப்பாறைகள் உருகி வருவதும்,
பிற சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்படுவதும் மனிதகுலத்தின் மேல் பெரும் விளைவுகளை உருவாக்கும்
என்று வத்திகான் அறிக்கை ஒன்று கூறியுள்ளது. உலகின் மிகப் பழமையான அறிவியல் கழகங்களில்
ஒன்றான பாப்பிறை அறிவியல் கழகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், மறுபடியும் சீரமைக்க
முடியாத மாற்றங்களை மனித குலம் சுற்றுச்சூழல் மீது உருவாக்கி வருவதைக் குறித்த ஓர் எச்சரிக்கையை
அளித்துள்ளது. இவ்வுலகில் நாம் நீதியையும், அமைதியையும் விரும்பினால், நாம் வாழும்
இப்பூமியைக் காப்பதில் முதல் கவனம் செலுத்த வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
2010ம் ஆண்டிற்கான உலக அமைதி நாள் செய்தியில் கூறியிருந்த எண்ணங்களை இவ்வறிக்கை மீண்டும்
வலியுறுத்தியுள்ளது.மனிதகுலம் பயன்படுத்தும் பல்வேறு கருவிகளிலிருந்து வெளியாகும் கரியமல
வாயுவின் (கார்பன் டை ஆக்சைடின்) அளவைக் குறைப்பது, காடுகளை அழிப்பதை நிறுத்துவது, மறுபடியும்
காடுகளை உருவாக்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால், சுற்றுச் சூழலையும், மனித குலத்தையும்
நம்மால் காக்க முடியும் என்று பாப்பிறை அறிவியல் கழகம் தன் பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.