ஒரிஸ்ஸாவில் சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதியைக் கொன்றவர்கள் தீவிர இடது சாரி மாவோயிஸ்ட்
குழுவினரே
மே 12,2011. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதியைக் கொன்றவர்கள் தீவிர
இடது சாரி மாவோயிஸ்ட் குழுவினரே என்று ஒரிஸ்ஸா மாநில புலனாய்வுத் துறையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இத்திங்களன்று
வெளியான இவ்வறிக்கையின்படி, மாவோயிஸ்ட் குழுவின் தலைவரான Sabyasachi Panda உட்பட, 14
பேர் கொண்ட மாவோயிஸ்ட் குழுவினரே இக்கொலையைச் செய்தனர் என்று தெரிய வந்துள்ளது. சுவாமி
லக்ஷ்மானந்த சரஸ்வதியைக் கொன்றவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறி, இந்துத் தீவிரவாத அமைப்பான
விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தினர் ஒரிஸ்ஸா கிறிஸ்தவர்கள் மீது வன்முறைகளை மேற்கொண்டதால்,
1000க்கும் அதிகமான கிறிஸ்தவர்களின் இல்லங்கள், 100க்கும் அதிகமான கோவில்கள் மற்றும்
கிறிஸ்தவ நிறுவனங்கள் பெருமளவில் தாக்கப்பட்டன; 100க்கும் அதிகமான கிறிஸ்தவர்களின் உயிர்கள்
பலியாயின. சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதியின் கொலையில் எவ்வித ஆதாரமும் இல்லாமல், கிறிஸ்தவர்கள்
மீது குற்றம் சாட்டிய விஷ்வ இந்து பரிஷத் கூட்டத்தினர் இந்திய மக்களிடமும், அகில உலக
சமுதாயத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அகில உலக இந்தியக் கிறிஸ்தவர்கள் சங்கத்தின்
தலைவரான Sajan K. George கூறினார். இது மட்டுமின்றி, வன்முறைகளை இந்தியாவில் வளர்த்து
வரும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினை அரசு தடை செய்ய வேண்டுமென்றும் George கேட்டுக் கொண்டார்.