மே 11,2011. இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்குப்
பெரும் சவாலாக அமைந்துள்ள கண்ணிவெடிகளை முழுமையாக அகற்ற இன்னும் 8 ஆண்டுகள் தேவைப்படும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இது தெரியவந்துள்ளதாக
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் கூறுகின்றனர். போரர்க்களமாகத் திகழ்ந்த
வடபகுதியில் கண்ணிவெடி மற்றும் குண்டுகள் வெடித்ததனால் ஏற்பட்ட விபத்துக்களில் கடந்த
ஆண்டு மட்டும் 49 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்விட்சர்லாந்தைச்
சேர்ந்த நைஜல் ராபின்சன் குறிப்பிடுகின்றார். இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்விடங்களில்
கடந்த வருடம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதையடுத்து, அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத்
திரும்பக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இதனையடுத்து தற்போது அந்த மக்களின் விவசாய நிலங்களில்
கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக நைஜல் ராபின்சன் கூறுகின்றார்.