லிபியாவிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.
மே 10, 2011. லிபியாவில் இடம்பெறும் மோதல்களால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் நாட்டை
விட்டு வெளியேறிவருவதாகவும், இத்திங்களன்று 30,000க்கும் மேற்பட்டோர் துனிசியா நாட்டிற்குள்
குடிபெயர்ந்துள்ளதாகவும் கவலையை வெளியிட்டார் அந்நாட்டு அப்போஸ்தலிக்க நிர்வாகி. அண்மை
அமைதி முயற்சிகள் எதுவும் மக்களின் அச்சத்தைப் போக்க உதவவில்லை என்ற ஆயர் ஜொவான்னி இன்னொசென்ஸோ
மர்த்தினெல்லி, மக்கள் பேரச்சம் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விருப்பத்தையே
வெளியிடுவதாகவும், அண்மை மோதல்கள் துவங்கியதிலிருந்து ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்டோர்
லிபியாவை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறினார். மோதல்களில் ஈடுபட்டிருப்போர் இடைக்காலப்
போர்நிறுத்தத்தில் கையெழுத்திட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய அவசரத்தேவையையும்
வலியுறுத்தினார் ஆயர் மர்த்தினெல்லி.