மெக்ஸிகோவில் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட கத்தோலிக்கத் தலைவர்கள் ஆதரவுடன் அமைதி ஊர்வலம்.
மே 10, 2011. கடந்த நான்கு ஆண்டுகளாக மெக்ஸிகோ நாட்டில் இடம்பெற்றுவரும் தொடர் வன்முறைகள்
நிறுத்தப்படக்கோரியும், போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் கொள்கை மாற்றங்கள் கோரியும்
கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகள் தலைமையில் அந்நாட்டு தலைநகரில் அமைதி ஊர்வலம் ஒன்று
மேற்கொள்ளப்பட்டது. வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கானக் கொள்கைகளை வரையறுக்க அரசு
தவறிவிட்டது என்றக் குற்றச்சாட்டுடன் இதில் கலந்து கொண்ட மக்கள், நாட்டில் பாதுகாப்பு
மற்றும் அமைதிக்காக செபிப்பதாகவும் அறிவித்தனர். போதைப்பொருட்களுக்கு எதிரான அரசின்
போரால், குற்றங்கள் குறையவில்லை மாறாக, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளே அதிகரித்துள்ளன
என்றார் அந்நாட்டில் மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் குரு ஆஸ்கார் என்ரிக்கோஸ். கடந்த
நான்கு ஆண்டுகளாக மெக்ஸிகோ நாட்டில் தொடரும் வன்முறைகளால் இதுவரை ஏறத்தாழ 40,000 பேர்
கொல்லப்பட்டுள்ளனர், பல இலட்சக்கணக்கானோர் அச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.