அரபு நாடுகளில் புரட்சிகளை ஊக்குவிக்காதீர்கள், மேற்கத்திய தலைவர்களுக்கு மெல்கித்தே
முதுபெரும் தலைவர் வேண்டுகோள்
மே07,2011. மத்திய கிழக்குப் பகுதியை தற்போது உலுக்கியுள்ள பொதுமக்கள் கிளர்ச்சிகளுக்கு
மேற்கத்திய தலைவர்கள் ஊக்கம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சிரியாவை மையமாகக்
கொண்ட மெல்கித்தே கிரேக்க-கத்தோலிக்க ரீதி திருச்சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம்
கிரகோரியோஸ் கேட்டுக் கொண்டார். எங்களது அரபு நாடுகள் புரட்சிகளுக்கும், ஏன், ஐரோப்பாவில்
இருக்கும் சனநாயகத்தைப் போன்றதோர் அமைப்பிற்குக்கூடத் தயாராக இல்லை என மேற்கத்தியத் தலைவர்களுக்கு
அக்கத்தோலிக்கத் தலைவர் அண்மையில் அனுப்பிய கடிதம் கூறுகிறது. அராபிய உலகத்தில் இங்கும்
அங்கும் காலவரையறையற்ற புரட்சிகளை ஊக்குவிக்க வேண்டாமென மேற்கத்திய நாடுகளின் தலைவர்களைத்
தான் கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அத்தலைவர். சிரியாவில் அரசை
எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்களில் நூற்றுக்கணக்கானவர்களை அரசுத் துருப்புக்கள் கொலை
செய்துள்ளன.