மே06,2011. புனித ஆன்செல்ம் பாப்பிறை திருவழிபாட்டுக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டதன்
ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு அந்நிறுவனம் நடத்தும் ஒன்பதாவது அனைத்துலக திருவழிபாட்டு மாநாட்டில்
கலந்து கொள்ளும் சுமார் 250 பிரதிநிதிகளையும் இவ்வெள்ளிக்கிழமை சந்தித்தார் திருத்தந்தை. கிறிஸ்தவத்
திருவழிபாடு, வாகுகுறுதிகள் கிறிஸ்துவில் நிறைவேறியதைக் கொண்டாடும் திருவழிபாடாகும்,
அத்துடன் உலகை மாற்றுவதற்கானப் பயணத்தில் நம்பிக்கையின் வழிபாடாகவும் இது இருக்கின்றது
என்று திருத்தந்தை கூறினார். “நினைவுக்கும், இறைவாக்குக்கும் இடையே புனித ஆன்செல்ம்
பாப்பிறை திருவழிபாட்டுக் கல்வி நிறுவனம்” என்ற தலைப்பில் இந்த ஜூபிலி ஆண்டு மாநாடு இடம்
பெறுவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, நினைவு என்று சொல்லும் போது, இந்த அரை நூற்றாண்டில்
தூய ஆவி தூண்டுதலால் கிடைத்துள்ள அளப்பெரும் பலன்கள் பற்றி நாம் நினைவில் கொள்ள வேண்டும்
என்றார். அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான், தூய ஆவியின் இறைவாக்குத் தூண்டுதலால் வழிநடத்தப்பட்டு
இந்தக் கல்வி நிறுவனத்தைத் தொடங்கப் பணித்தது, இந்த நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்
திருச்சபையில் திருவழிபாட்டு மறுமலர்ச்சிக்குச் செய்து வரும் அரும்பணிகள் போன்றவை பற்றியும்
எடுத்துச் சொன்னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்